Skip to main content

கொள்ளையடிப்பதற்குச் சமம்... டாஸ்மாக் தொடர்பான வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை சரமாரி கேள்வி!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

High Court dissatisfied with Tasmac actions

 

டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, இன்று (14.12.2020) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசுத் தரப்பில், "தமிழகத்தில் உரிய விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, 3,000 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டது. 

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "எது எதுக்கெல்லாம் சி.சி.டி.வி கேமிரா எனும் விவஸ்தையே இல்லையா? பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே மது வாங்க வருகிறார்கள். அப்படி இருக்கையில், மதுவைக் கூடுதல் விலைக்கு விற்பது அவர்களிடமே கொள்ளையடிப்பதற்குச் சமம்" எனக் கருத்துத் தெரிவித்தனர்.

 

தொடர்ந்து பேசுகையில், "கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், கூடுதல் விலைக்கு மதுவை விற்றால், நீதிபதிகளே வந்து ஆய்வுசெய்ய நேரிடும்" என எச்சரித்த நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 07-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து 'நக்கீரன்' இணையதளத்திடம் கருத்துத் தெரிவித்த அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, "மதுக்கடைகள் இல்லாத தமிழகமே எங்களின் நோக்கம். ஆனால், நடைமுறையில் மதுபான விற்பனையில் ஊழல் பெருகிவருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் நான் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலந்து கொண்டேன்.

 

rajeswari

 

அப்போது, டாஸ்மாக்கில் முறையாக ரசீது வழங்கப்படுகிறதா? கொள்ளையடித்து மதுவாங்குபவரிடமே கொள்ளையடிப்பதா? மது தயாரிப்பதற்கு என்ன என்ன பொருட்கள் பயன்படுத்தபடுகின்றன? டாஸ்மாக்கிற்கு, யார் யாரிடம் இருந்து மது கொள்முதல் செய்யப்படுகிறது? என்பன போன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகளால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் திக்குமுக்காடிப் போனார். அரசுத் தரப்பு சி.சி.டி.வி பொருத்தி, உரிய விலையில் மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தது. அதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எது எதற்கெல்லாம் சி.சி.டி.வி என்பதற்கு விவஸ்தையே இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குத் தொடுத்த என்னை, நீதிபதிகள் பாராட்டினர்" இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.