Skip to main content

நக்கீரன் இணைய செய்தியால் கிடைத்த உதவி; மனம் நெகிழும் விருதுநகர் மகாலெட்சுமி

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Help from Nakkeeran Internet News to Virudhunagar Girl

 

"படிக்கனும்னு ஆசையா இருக்குண்ணா," இப்படி பலரது மனதையும் பிழிந்தெடுக்கும் வகையில் மழலையின் ஏக்கத்தை நக்கீரன் இணையத்தில் வீடியோ செய்தியாக பதிவிட்டிருந்தோம். 

 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குருபாக்கியம். கணவனால் கைவிடப்பட்ட இவர், வலிப்பு நோயாளியாக இருக்கிறார். இவருக்கு ஒன்பது வயதில் மகாலெட்சுமி என்கிற பெண் குழந்தையும், சுரேஷ் என்கிற மகனும் உள்ளனர். குடும்பத்தின் வறுமையினால் சுரேஷ் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சித்தால் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காத்துவருகிறார். மகாலெட்சுமியோ படிப்பை ஒதுக்கிவைத்துவிட்டு தாய் குருபாக்கியத்திற்கும், அண்ணன் சுரேஷுக்கும் தாயாக இருந்துவருகிறார். அந்த இளம்தளிரின் சோகத்தை யாரும் கண்டிடாத சூழலில், ‘நாங்களும் இருக்கிறோம்’ என்கிற அமைப்பின் நண்பர்கள் மூலம் நமக்கு தகவல்கிடைக்க, அவர்களின் சோகத்தை வீடியோவாகப் பதிவிட்டு நக்கீரன் இணையத்தில் பதிவிட்டதோடு விருதுநகர் ஆட்சியர், தொகுதி எம்.எல்.ஏ.வின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். செய்தியினைப் பார்த்த சமூக ஆர்வலர்களும் மனிதநேயமிக்கவர்களும் அடுத்தடுத்து அவர்களுக்கு உதவிகளைச் செய்தனர். நக்கீரன் வாசகர்களும் அவர்களின் வங்கிக் கணக்கை நம்மிடம் பெற்று இயன்ற உதவிகளைச் செய்தனர். 

 

விருதுநகர் ஆட்சியரோ முதற்கட்டமாக தாசில்தார், மற்றும் கிராமநிர்வாக அதிகாரிகளை அனுப்பி மகாலெட்சுமி மற்றும் அவரது தாயார் குருபாக்கியத்தையும், அண்ணன் சுரேஷையும் பார்க்கச் சொன்னதோடு அவர்களுக்கு முதற்கட்ட உதவிகளைச் செய்ய சொல்லியிருந்தார். ஆட்சியரின் உத்தரவுப்படி நேற்று முன்தினம் அங்கு வந்து உதவிசெய்துவிட்டுச் சென்றனர்.

 

இந்தநிலையில் நேற்று (17ம் தேதி) காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகள், மருத்துவர் சகிதம் வந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள், மூன்று மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், ஆட்சியர் நிதியிலிருந்து 15,000 ரூபாய் ரொக்கம், சுரேஷ் ஆன்லைன் வகுப்பு மூலம் படிப்பதற்கு செல்போன் ஒன்றையும வாங்கி வந்து கொடுத்தனர்.

 

மேலும் அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “இனிமேல் நீங்க கவலைபடாதீங்க. சமத்துவபுரத்தில் அனைவருக்கும் வீடு தயாராகியிருக்கிறது. அங்கு உங்களுக்கு வீடு ஒதுக்கித் தருகிறோம். நீங்கள் அங்கு சவுகாரியமாக இருக்கலாம்" என்றார். அதற்கு குருபாக்கியமும் அந்த பிள்ளைகளும், “இங்கயே இருந்துட்டோம், ஏதாவது ஒன்னுன்னா இங்க உள்ளவங்க ஓடிவந்து உதவுவாங்க, அங்க யாரையும் தெரியாது. இங்கயே ஒரு இடம் தாங்க” என்று கூற, ஆட்சியர் சற்றும் யோசிக்காமல், “பக்கத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் பட்டா தருகிறோம், அதோடு வீடு கட்டுவதற்கான வசதிகளையும் செய்து தருகிறோம்” என உத்தரவாதம் கொடுத்ததோடு அருகில் இருந்த மருத்துவர்களிடம் நாளை அவர்களுக்கு உண்டான சிகிச்சையை அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

 

இது குறித்து ‘நாங்களும் இருக்கிறோம்’ அமைப்பின் சாதிக்கிடம் கேட்டோம், “எங்களின் கவனத்திற்கு வந்ததை வெளியுலகத்திற்கும், ஆட்சி அதிகார மட்டத்திற்கும் கொண்டுசென்றது நக்கீரன்தான். விளிம்புநிலையில் கவனிப்பாரற்று இருந்த அந்த உயிர்களின் நிலையறிந்து செய்தி வெளியிட்டதற்கு முதலில் கோடான கோடி நன்றியை நக்கீரனுக்கு காணிக்கையாக்குகிறோம். எங்களோடு சேர்ந்து நான்கு அமைப்புகள் அவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்தோம். நக்கீரனால் அதிகார மட்டத்தின் காதில் பட்டுவிட்டது. இனிமேல் அந்தக் குடும்பம் காப்பாற்றப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. ஆட்சியர் வந்து அனைத்து நல உதவிகளும் செய்துகொடுத்துள்ளார். திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரடியாக வந்து உதவிகளைச் செய்துள்ளார். 

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், அவர்களின் குடும்பத்திற்கு உதவுவதாக கூறியிருக்கிறார். அதோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வருவதாகக் கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் நக்கீரன்தான். இந்தச் செய்தியை உலகறியச் செய்து விளிம்பு நிலையில் வறுமையில் வாடிக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளுக்கு உதவிக்கிடைத்திட செய்த நக்கீரனுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்" என்கிறார் ஆனந்தமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.