![Heavy rain echoes; Tomorrow is a holiday for schools in Karaikal](http://image.nakkheeran.in/cdn/farfuture/seETKGgQYDHVSP_fBTUCNflEcqe-KBKC68Euxt79NyU/1704731502/sites/default/files/inline-images/a3831_3.jpg)
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (08.01.2024) காலை 8.30 மணி வரையில் தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சராசரியாக 2.15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 13.18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதேசமயம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் நாளை (09.01.2024) கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் நாளை மறுநாள் (10.01.2024) கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது..