Skip to main content

திடீரென இறந்துபோன 'ராவணன்' காளை! - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ravanan ox

 

2020 ஜல்லிக்கட்டில், அவனியாபுரம் முதல் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய காளை 'ராவணன்'. இது புதுக்கோட்டை எஸ்.ஐ, அனுராதாவின் காளை. இந்தக் காளை பற்றி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை பேச்சாக இருந்தது. இந்த காளை ராவணன், எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி வந்தது. அதன் பின்னணி என்ன?

 

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா பளு தூக்கும் வீராங்கனை. காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை சென்று நூற்றுக்கணக்கான பதக்கங்களைக் குவித்தவர். அவருடைய அண்ணன் மாரிமுத்து படிப்பை துறந்து கூலி வேலைசெய்து அனுராதா இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளார். விளையாட்டில் சாதித்ததால், தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ பணிகிடைத்தது. 

 

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்த அனுராதாவுக்குப் பாராட்டுகள் குவிந்தது. அப்படித்தான் தஞ்சையில் உள்ள வினோத், தன் மனைவியின் தோழியான அனுராதாவுக்கு, தஞ்சை வத்திராயிருப்பில் இருந்த காளையை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். மேலும், 'உனக்கும் இந்த காளை பெருமை சேர்க்கும்' என்று சொல்லி கொடுத்தார். தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுரதாவின் அண்ணன் மாரிமுத்து 'ராவணன்' எனப் பெயர் வைத்து, குடும்பப் பெண்களும் சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன், ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.

 

ravanan ox

 

அனுராதாவுக்கு பரிசாகக் கிடைத்த காளை என்பதால் அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன் முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. பின்னர் ஊடகங்களின் பார்வையும் ராவணன் பக்கம் திரும்பியது. 'சிறந்த காளை' என்ற பெயரோடு வீட்டுக்குத் திரும்பினான் ராவணன். அடுத்த நாள் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டில் காலை 8.30 மணிக்கு அனுராதாவின் காளை ராவணன் களமிறங்கி கலக்கியதும் நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது.

 

அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன் தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால், மாலை முடிவு அறிவித்த போது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்சி இனக் காளைக்கு முதல் பரிசும், நாட்டு இனக் காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டினத்தைக் காக்கத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு மாற்றி கலப்பினப் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது. ஆனாலும் அந்த வருடம் மட்டுமின்றி இந்த வருடமும் ராவணன் தமிழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்று கலக்கியது. 

 

இந்த நிலையில், கடந்த வாரம் முரட்டுச் சோழகன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட ராவணன் யாரிடமும் பிடிபடவில்லை. காளையை வளர்த்த தம்பி மாரிமுத்து கூட கயிறு வீசியும் ஒருவாரமாகப் பிடிபடாமல் கிராமங்களில் உள்ள காடுகளில் சுற்றியது. இந்த நிலையில் தான் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தைல மரக்காட்டிற்குள் பெரிய புற்றை, கொம்பால் குத்தி உடைத்தது. பின்னர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது.

 

ravanan ox

 

இது குறித்து அனுராதாவின் உறவினர்கள் கூறும் போது, “முரட்டுச் சோழகன்பட்டியில் பிடிபடாமல் தப்பிய ராவணன், பல நாட்கள் காடுகளில் சுற்றி இருக்கிறது. கிள்ளுக்கோட்டை காட்டில் புற்றில் இருந்த நல்லபாம்பு செல்வதைப் பார்த்து ராவணன் பெரிய உயரமான புற்றை தன் கொம்பால் குத்தி உடைத்திருக்கிறது. அப்போது அந்தப் பாம்பு ராவணனை கடித்திருப்பதால், அதே இடத்தில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து போய் தூக்கி வந்து மாலைகள் அணிவித்து மனிதர்களுக்குச் செய்வது போல அத்தனை சடங்குகளும் செய்தோம். காளை ஆர்வலர்கள், காளைபிடி வீரர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாலை அணிவித்துச் சென்றார்கள். சாதித்த காளைகளை சாவு தேடி வருவது வேதனையாக உள்ளது. கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்றனர். பரிசாக வந்த ராவணன், பரிசுகளை அள்ளிக் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், இன்று அதே ரசிகர்கள் கண்ணீரோடு மாலை அணிவித்து வருவதைக் காண வேதனையாக உள்ளது” என்றனர்.

 

மேலும் தனது காளை இறந்ததை அறிந்து பாட்டியாலாவில் பயிற்சியில் இருக்கும் அனுராதா கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.