தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதனுடன் சேர்த்து தமிழ்நாட்டில் ஏனைய விடுபட்ட மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும், சில உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
வரும் அக். 2ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், திருச்சியில் தேர்தல் நடக்கும் அந்த ஊராட்சிகளைத் தவிர, திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு, நிர்வாகத்தில் இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதி, அரசினால் அவ்வப்போது அளிக்கப்பட்டுவருகிறது. 02.10.2021 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணிக்குள்ளாக கிராம சபைக் கூட்டத்தில் பெருமக்கள் கலந்துகொண்டு ஊராட்சிகளில் கிராம சபை நடைபெறுவதை உறுதிபடுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.