மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை எடப்பாடி அரசு நிறைவேற்றியது. இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின்ஒப்புதல் கிடைக்காததால் இந்த ஆண்டிற்கான மருத்துவக் கவுசிலிங் இன்னும் நடத்தப்படவில்லை.

ஒப்புதல் வழங்க வேண்டி முதல்வர் எடப்பாடியும் அமைச்சர்களும் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டமும் நடந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட சட்ட மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு 3 லிருந்து 4 வாரங்கள் தேவைப்படும் என ராஜ்பவன் தெரிவித்தது. இதனால், 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா நடப்பாண்டில் நிறைவேற்றப்படுமா? என கிராமப்புற மாணவர்களிடம் குழப்பமும் கவலையும் பரவி வருகிறது.

Advertisment

இந்தநிலையில்,"கவர்னர் தாமதம் செய்யக்கூடாது. விரைந்து முடிவெடுக்க வேண்டும் " என தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை, இன்று பதிவு செய்துள்ள தனது ட்விட்டர் பக்கத்தில், " கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து மாணவர்களின் மனதிலுள்ள குழப்பத்தை நீக்க வேண்டும். முக்கியமான இந்த பிரச்சனையில் இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என கவர்னரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.