சனாதான தர்மம் பற்றிய ஆளுநரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
''வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். ஆனால் சனாதன தர்மமும் அதையே கூறுகிறது. சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவால் தகர்க்கப்பட்டது இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்'' என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.
இந்நிலையில், சனாதன தர்மம் குறித்த தமிழக ஆளுநரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல, அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல. ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்ஸின் தயாரிப்பு. ஆர்.எஸ்.எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. ஆகவே அவர் இங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே முதலில் எதிர்த்து, அவரை நியமிக்கக் கூடாது என்ற சொல்லியது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்'' என்றார்.