Skip to main content

ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டே நாள்... லஞ்ச ஒழிப்புத் துறையால் பெண் அதிகாரி கைது!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலராக பணி செய்து வந்தவர் ஜெயபிரபா (58). இவர் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணி செய்து வருகிறார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

Government Woman officer arrested

 



கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினர் பெண்ணுக்கு திருமண உதவி திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முறைப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். பொதுவாக இதுபோன்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இருந்தாலும் அந்த விண்ணப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட மணமகன் மணமகள் வீட்டாருக்கு சமூக விரிவாக்க அலுவலர்கள் வீட்டுக்கு வந்து விசாரணை செய்து உதவித்தொகை கிடைக்க உறுதி சான்று அளிப்பது வழக்கம். இவர்கள் உறுதி சான்று எடுத்து பரிந்துரை செய்த பிறகே அரசு நிதி உதவியை வழங்கும். 

இதை பயன்படுத்தி தமிழகத்தில் பெரும்பாலான சமூக விரிவாக்க அலுவலர்கள் மணமகள் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதிலும் இந்த ஜெயபிரபா இரண்டு நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் இருந்ததால் கடந்த சில மாதங்களாகவே தீவிரமான வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இதற்காகவே திருமண உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று விசாரணை என்ற பெயரில் அவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கில், மண்டபத்தில் திருமணம் நடைபெற்று இருந்தால் நீங்கள் வசதியானவர் உங்களுக்கு எப்படி உதவி தொகை கிடைக்கும் என்று பல்வேறு முரணான கேள்விகளை கேட்டு பெண்ணின் பெற்றோர்களை திணறடித்து, அதையெல்லாம் சரி செய்து தருவதாக கூறி குறைந்தபட்சம் ரூ. 3000 மேல் பணம் பறித்து வந்துள்ளார்.  

 



இந்நிலையில் கோவிந்தராஜ் என்பவர் ஜெயபிரபாவின் அதிரடியான பேரம் பேசி பணம் கேட்டதை பொறுக்கமுடியாமல் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து கோவிந்தராஜ் திருமண உதவித் தொகைக்காக ஜெயபிரபாவிடம் லஞ்சம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.இந்த செய்தி விருத்தாசலத்தில் மட்டுமல்ல தமிழகம முழுவதும் பரபரப்பாகியுள்ளது.  

ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது என்பது இப்போதுள்ள விலைவாசியில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அரசு திருமண உதவி திட்டம் மூலம் கொடுக்கும் தொகை அப்படி பட்ட பெற்றோர்களுக்கு அவர்கள் செய்யும் செலவில் சிறிதளவு ஈடுகட்ட முடியும் என்பதால் அரசுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அங்கேயும் பணம் வசூலிக்கப்படுவது வேதனைக்குரியது. இந்த கைது சம்பவம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலகங்களிலும் இதுபோன்ற சமூக விரிவாக்க அலுவலராக உள்ள பெண்களின் ஈவிரக்கமற்ற வசூல் வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று பொருத்திருந்து பார்க்கலாம். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.