Skip to main content

கஞ்சித் தொட்டி திறந்த நெசவாளர்கள்! -அரசிற்கு ஐ.பெரியசாமி எச்சரிக்கை!!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
Government should abandon the trend of cheating weavers!-i periyasamy


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியிலுள்ள சின்னாளபட்டி பகுதியில் வசிக்கும் நெசவாளர்களுக்கு பாவு மற்றும் நூல்களை, கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் வழங்காததை கண்டித்து கடந்த ஒருவாரமாக கஞ்சித் தொட்டியில் கஞ்சி காய்ச்சி நெசவாளர்கள் குடித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை.


இந்தநிலையில் ஆத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது தொகுதியில் உள்ள நெசவாளர்களின் நலன் கருதி அரசை எச்சரித்து அறிக்கை விட்டிருக்கிறார். அதில்,

பாரம்பரிய தொழிலாக திகழும் கைத்தறியின் அடையாளமான சின்னாளபட்டியில் சுமார் 4,200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தற்போது வேலைவாய்ப்பின்றி, வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். இங்கு 8 நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட உறுப்பினர்கள் சுமார் 1,800 பேரும், உறுப்பினரல்லாத 2,400 பேர்கள் கரோனா பேரிடர் ஊரடங்கில் அரசு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள்.

 

 


கரோனாவிற்கு முன்னர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெசவாளர்களுக்கு வழங்கிய பட்டுநூல் மற்றும் பாவுகளுக்கு உரிய சேலை நெய்தும் இன்னமும் கூலிப் பணங்களை இன்னமும் பட்டுவாடா செய்யவில்லை. தற்போது தொழில் உற்பத்தி புரிவோருக்கான தளர்வு சுமார் 10 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை புதிதாக நெசவாளர்களுக்கு சேலை நெய்ய நூல், பாவுகளை வழங்க கூட்டுறவு சங்கங்கள் முன் வரவில்லை. ஆக மொத்தம் 65 நாட்களில் நெசவாளர்கள் எந்தவித வருமானம் இல்லாமல் வாடி வருகின்றனர். மேலும் தறி ஒன்றுக்கு தலா ரூ.10,000 மற்றும் நெசவாளர் பிரதிநிதிகளுக்கு ரூ. 5000  நிவாரணம் வேண்டி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும்கூட கொடுக்கவில்லை. ஆனால் அரசு தரப்பில் நிவாரணம் ரூ 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு பத்திரிகைகளில் மட்டுமே வந்ததே தவிர இதுவரை எந்த ஒரு நெசவாளருக்கும் நிவாரணம் சென்று சேரவில்லை.

 

 

Government should abandon the trend of cheating weavers!-i periyasamy

 

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் தனியார் மாஸ்டர் வீவர்களின் ஏஜண்ட்கள்  நூல்-பாவுகளை நெசவாளர்களுக்கு வழங்கி வறுமையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கு வேலை வாங்கும் அடிமைப்போக்கினை அமுல்படுத்தி வருகிறது. இதனை அரசும், கூட்டுறவு சங்கங்கங்களும்,  கண்டு கொள்ளாதிருப்பது ஈவு இரக்கமற்ற செயல்.

நடைமுறையில் உள்ள கூலியில் சுமார் 15 % முதல் 20% வரை கூலியானது குறைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. வேலை கொடு இல்லையேல் சோறு கொடு என்ற வறுமை ஓலங்கள் அரசின் செவிக்கு இன்னும் கேட்கவில்லையோ? கடந்த 4 நாட்களுக்கு முன்னர், அஞ்சுகம் காலனியில் நெசவாளர்கள் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட்ட அவல நிலையும் அதன்பின்னர் தொடர்ந்து அண்ணா நகர் பகுதி நெசவாளர்கள் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட உள்ளதையறிந்து வட்டாட்சியர் கைத்தறி துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சென்று தடுத்து நிறுத்திய செய்தி பத்திரிகைகளில் வெளியானது கூட அரசின் கண்களுக்கு தெரியவில்லையோ?


 

nakkheeran app




ஆகவே தமிழக அரசு, வாழ்வாதாரம் நொடிந்த நிலையில் வாடிவரும் நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கி, உரிய கூலி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், காலம் தாழ்த்தும் பட்சத்தில் அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் இறங்கும். அதுமட்டுமின்றி,  நேரடியாக நெசவாளர் பிரதிநிதிகளுக்கு முறையாக நூல்-பாவுகளை வழங்காமல், தனியார் ஏஜண்ட்களின் பிரதிநிதிகளுக்கு மறைமுக ஒப்பந்தமாக வேலையினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதிகாரிகள்  மீது விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துகிறேன் என  தனது அதில் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.