Skip to main content

நீட் தேர்வில் வென்று மருத்துவ கலந்தாய்வுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகள்! 

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Government school students who win the NEET exam and go for medical consultation!

 

திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது. பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ, ஆசிரியர்கள் புஷ்பராஜ், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த காமாட்சிபட்டியைச் சேர்ந்த விவசாயி நல்லதம்பி என்பவர் மகள் ஜமீனா, முசிறியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் போக்குவரத்து மேலாளராகப் பணியாற்றும் பழனிமுத்து என்பவரின் மகள் பவதாரணி, மணமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையன் மகள் ருக்மணி ஆகியோர் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதினர். அத்தேர்வில் ஜமீனா 280 மதிப்பெண்களும், பவதாரணி 154, ருக்மணி 109 மதிப்பெண்களும் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். 

 

அதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர். அப்போது தலைமையாசிரியர் தீபா புத்தகங்களை மாணவிகளுக்கு பரிசாக வழங்கினார். மாணவிகள், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது மாணவிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். பயிற்சி அளித்த வருப்பு ஆசிரியர்கள் புவனேஸ்வரி, சியாமளா தேவி, அருணாதேவி மற்றும் சக ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் நன்றி’ எனத் தெரிவித்தனர். 

 

நீட் தேர்வுக்காக மாணவிகள் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து கோச்சிங் கிளாஸ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை ஓமந்தூரார் மாளிகையில் நடைபெறும் நேர்காணலில் மாணவிகள் 3 பேரும் பங்கேற்க உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது