Skip to main content

முடங்கிய பொதுப் போக்குவரத்து; பொதுமக்கள் கடும் அவதி! 

Published on 26/02/2021 | Edited on 27/02/2021

 

Government public transport freeze, public suffering


தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் 80 சதவிகித அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வைத் தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்கள் உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

 

இது சம்பந்தமாகத் தொழிற்சங்கத்தினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 25ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன. அதன்படி 25ஆம் தேதி காலை 6 மணி முதல் போராட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திரண்டு சென்று பணிமனைகள் முன்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 

நேற்று 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாசிமகத் திருவிழா சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிவனை வழிபட்டு வருவார்கள். ஆனால், பஸ் போக்குவரத்து இல்லாததால் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மேலும் பஸ் கூரைகளின் மீது ஏறி நின்றபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்து இயங்காததால், ஒவ்வொரு போக்குவரத்துப் பணிமனைகளிலும் அரசுப் பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஷேர் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

People travel with umbrellas inside the bus!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது. 

 

இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

Next Story

அரசுப் பேருந்து நடத்துநர் மோசடி! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Government bus conductor fraud!

 

கடலூர் மாவட்டம், வடலூர், ஊமங்கலம் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மழவேந்தி, உத்திராபதி ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஏறினார்கள். அப்போது அவர்கள் பயணிகளின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்து சீரியல் எண் சரி பார்த்தபோது அந்த டிக்கெட் பழைய டிக்கெட் எனத் தெரியவந்தது.

 

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் டிக்கெட்டை பரிசோதித்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகளிடம் இருந்த டிக்கெட் ஏற்கனவே பயணம் செய்தவர்களின் டிக்கெட் என்றும் இது பழைய டிக்கெட் என உறுதியானது. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார். அதன் காரணமாக அவரது பணப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த டிக்கெட் பழைய டிக்கெட் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சத்தியமூர்த்தி மற்றும் நடத்துநர் நேரு ஆகிய இருவரையும் சேலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.

 

இவர்கள் நடத்திய விசாரணையில், நடத்துநர் பழைய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடியில் ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.