Skip to main content

“உழைச்சுப் பிழைக்க வேலைதானய்யா கேட்கிறோம்” - கண்ணீரில் அரசு பண்ணை தொழிலாளர்கள்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Government farm workers struggle in Pudukkottai

 

அரசு பண்ணைகளில் அரசு வேலை செய்வோர் முதல் தினக்கூலியாக தோட்டவேலை செய்வோர் வரை 60 வயதுக்கு மேல் பணி செய்ய அனுமதியில்லை என்று 2004ம் ஆண்டு எழுதிய ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு 2023ம் ஆண்டு தோட்டவேலை செய்யும் தினக்கூலி பண்ணை தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலால் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை போராட்டக்களமாக மாறியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் பயறு வகை விதை உற்பத்தி பண்ணை, பாட்டுமங்கலம், வல்லத்திராகோட்டை பழம் மற்றும் பல மரக்கன்றுகள் உற்பத்தி பண்ணை, வெள்ளாளவிடுதியில் தேங்காய், கடலை போன்ற எண்ணெய் வித்து மற்றும் விதை உற்பத்தி பண்ணை, குடுமியான்மலையில் விதை உற்பத்தி பண்ணை என பல பண்ணைகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகின்றன. இந்தப் பண்ணையில் கடந்த 35, 40 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களே தினக்கூலிகளாக தோட்டவேலை செய்து வருகின்றனர். இந்த பண்ணை வேலையால் இந்த குடும்பங்களில் உலை கொதிக்கிறது. 

 

இந்த நிலையில் தான் குடுமியான்மலை அண்ணா பண்ணையில் வேலை செய்யும் சுமார் 50 பேருக்கு 60 வயது கடந்துவிட்டதாகக் கூறி கடந்த வாரம் வேலையில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். வேலையிழந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியதால் அங்கு வந்த அதிகாரிகள் வேலை கொடுப்பதாக உறுதி கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அந்த உறுதி 2 நாட்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் வேலை பறிப்பு செய்யப்பட்டனர். வேலையிழந்த பண்ணை தொழிலாளர்கள் இன்று பாய், தலையணை, அடுப்பு, விறகு, பாத்திரங்களுடன் அண்ணா பண்ணையில் குடியேறியுள்ளனர். எங்களுக்கு வேலை கொடு! உடலில் உழைத்துப் பிழைக்க தெம்பிருக்கும் வரை வேலை கொடு! என்று முழக்கங்களுடன் பேரணியாகச் சென்று குடியேறியுள்ளனர்.

 

இது குறித்து போராட்டக்களத்தில் நின்ற நியாஷ் கூறும்போது, “தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. உழைக்கும் உடற்திடமும் மனத்திடமும் அவர்களிடம் உள்ளது. தினக்கூலி ரூ. 1.50க்கு வேலைக்கு வந்தவர்களுக்கு இப்போது ரூ. 420 கிடைக்கிறது. இந்த சம்பளத்தை வைத்து தான் வயதான காலத்தில் வயிறாற சாப்பிடுகிறார்கள். ஆனால், திடீரென 2004ல் இயக்குநர் எழுதிய கடிதத்தைக் காட்டி வேலைகளைப் பறிக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. வேலையில் சேர்க்கும் போது வயதுவரம்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் விதை உற்பத்தியை ஊக்கப்படுத்தி உள்நாட்டு விதை உற்பத்தியை நிறுத்துவதற்காக இந்த வேலை பறிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

சுமார் 35, 40 ஆண்டுகளாக பண்ணைக்காக உழைத்தவர்களுக்கு நிபந்தனையின்றி வேலை கொடுக்க வேண்டும் அல்லது அவர்களின் பணிக்காலத்தை கணக்கிட்டு பணக்கொடை வழங்க வேண்டும். அதுவரை பண்ணை தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டக்களத்தில் நிற்போம். தமிழ்நாடு முதலமைச்சர் உடனே தலையிட்டு தினக்கூலித் தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்பு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

இதே போல அனைத்து அரசு பண்ணை தொழிலாளர்களையும் வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.