கடந்த ஆண்டு நீட் தேர்வில் தொடங்கிய இந்த தேர்வு முறைகேடு சர்ச்சைகள், கைதுகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்பொழுது அது டிஎன்பிஎஸ்சி தேர்வு வரை நீளுகிறது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி, சிபிசிஐடி போலீசார் இதுதொடர்பாக பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முக்கிய இடைத்தரகராக கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 23 அரசு பணிகள் சுமார் 4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த தேர்வு மோசடி சர்ச்சை டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வையும், எஸ்ஐ தேர்வையும் விட்டுவைக்காமல் விடைதெரியா கேள்வியாகவே நீளுகிறது. இப்படி ஒருபக்கம் இருக்க, ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு ஆசிரியர் பணிக்காக டெட் 1 தேர்வும், 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புக்கு ஆசிரியர் பணிக்காக டெட் 2 தேர்வும் நடத்தப்பட்டது. 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியானவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
இதில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுவும் ஒரு சில தேர்வு மையங்களில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாள் ஒன்றில் 4,5 என மதிப்பெண் வாங்கியவர்கள் தாள் இரண்டில் 150 க்கு 140 என மதிப்பெண் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இப்படி அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் தொடர்ச்சியாக தேர்வு முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.