
ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14- வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஊழியர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், அலுவலகம் செல்வோர், வெளிமாவட்டங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்குப் பாதிப்பு இல்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 9 அரசுப் பேருந்து பணிமனைகளுக்கு உட்பட்ட 385 பேருந்துகளில் 35 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், 2,553 ஊழியர்களில் 200 பேர் மட்டுமே பணிக்கு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், கடலூர் மாவட்டத்திலும் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கேயம், பல்லடம், தாராபுரம், பழனி உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து 100- க்கும் குறைவான அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்திற்குக் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.