![Government bus drivers fined for not wearing seat belts in Nellai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Inde9rnO-NN1dwVBtJewq23gAHBnhLzdKvpi_HuPNYs/1716556203/sites/default/files/inline-images/Untitled-22_6.jpg)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குக் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.." என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தக் காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஓட்டுநர் நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்துவது, சீருடை அணியாமல் வண்டியை இயக்குவது என விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
![Government bus drivers fined for not wearing seat belts in Nellai](http://image.nakkheeran.in/cdn/farfuture/0l-KfGD83lecwsRiNI3dsnKf38nYa-SnDpFC2Oxvw_s/1716556223/sites/default/files/inline-images/Untitled-20_16.jpg)
அந்த வகையில் தற்போது, நெல்லை வள்ளியூரில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் சீட் பெல்ட் மற்றும் சீருடை அணியவில்லை என்று இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்ததை தொடர்ந்துதான் தற்போது அரசு பேருந்துகளைக் குறிவைத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையைப் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர்.