Skip to main content

‘சீட் பெல்ட் அணியவில்லை’ - அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Government bus drivers fined for not wearing seat belts in Nellai

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குக் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.." என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தக் காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்தச் சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஓட்டுநர் நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்துவது, சீருடை அணியாமல் வண்டியை இயக்குவது என விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Government bus drivers fined for not wearing seat belts in Nellai

அந்த வகையில் தற்போது, நெல்லை வள்ளியூரில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் சீட் பெல்ட் மற்றும் சீருடை அணியவில்லை என்று இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்ததை தொடர்ந்துதான் தற்போது அரசு பேருந்துகளைக் குறிவைத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையைப் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓட்டுநரின் அலட்சியம்; புளியமரத்தில் மோதிய அரசு பேருந்து

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Government bus accident near Tirupattur after hitting a tamarind tree

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நாட்றம்பள்ளி நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. இந்தப் பேருந்தில் ஓட்டுனராக ஜீவா(48) என்பவரும் நடத்துநராக சௌந்தரராஜன்(50) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டேரி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் ஜீவா செல்போன் பேசிக்கொண்டு பேருந்து இயக்கி உள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திவ்யஸ்ரீ, முருகம்மாள், திவ்யா, மச்சராணி மற்றும் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 13 பெண்களுக்கும் 4 ஆண்களுக்கும், இரண்டு வயது குழந்தை என மொத்தம் 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

புளியமரத்தில் மோதி அரசு பேருந்து விபத்து; 18க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Govt bus crash into tamarind tree; More than 18 people were injured

அண்மையாகவே அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதுபட்டு சாலையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து புளிய மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்றம்பள்ளியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கட்டேரியம்மன் கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்துக்கு நேர் எதிராக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுப்பதற்காக பேருந்து ஓட்டுநர் ஜீவா பேருந்தை சடாரென திருப்பியுள்ளார். அப்பொழுது சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் அரசு பேருந்து மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பயணித்த பயணிகள் 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.