Skip to main content

பள்ளி மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு; அரசுப்பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Government bus driver has been suspended in salem

 

சேலம் அருகே, அரசுப் பேருந்தில் பயணம் செய்து வரும் பள்ளி மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய, பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் பெரிய சோரகையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தாரமங்கலம் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசுப் பள்ளிக்கு, மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் செல்லும் குறிப்பிட்ட ஒரு அரசுப் பேருந்தில் சென்று வருகின்றனர். குறிப்பிட்ட அந்தப் பேருந்தின் ஓட்டுநராக உள்ள முருகேசன், மாணவிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும், சிலரை இழிவுபடுத்தி பேசுவதாகவும் புகார்கள் கிளம்பின. இதனால் மாணவிகள் சிலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர். 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செப். 28ம் தேதி மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் மக்களிடம் சமாதானாப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுப் போக்குவரத்துக் கிளை மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 

 

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், மாணவிகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேசனை பணியிடைநீக்கம் செய்து, அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.