Skip to main content

கடலூர் மாவட்டத்தில் 10ரூ நாணயத்தை வாங்க மறுக்கும் அரசு, தனியார் நிறுவனங்கள் 

Published on 12/03/2018 | Edited on 12/03/2018
kadalore

 

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ10 நாணயம் செல்லாது என்று அரசின் வணிக தொடர்பு மற்றும் தனியார் நிறுவனங்கள்,கடைகளில் பொதுமக்களிடம் ரூ10 காயினை வாங்க மறுத்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

 

 ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு சில்லரை ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது வங்கிகளில் வியாபாரிகளுக்கு பத்து ரூபாய் நாணயங்கள் நிறைய வழங்கப்பட்டன. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என சிலர் கிளப்பி விட்ட புரளியால் யாரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் பயணிகளிடம் ரூ10 நாணயம் வாங்க மறுக்கின்றனர். 

 

மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் அலுவலகம், காதி கிராப்ட்,மின்துறை அலுவலகம்,கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியார் வர்த்தக நிறுவனங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் நாணயங்களை வாங்க மறுக்கிறது. இதனால் வர்த்தகர்கள்,பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கில் 10 ரூபாய் நாணயங்களை வைத்து கொண்டு தவித்து வருகின்றனர். 

 

சிதம்பரம்,கடலூர்,வடலூர்,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளிலுள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதில்லை. ஆகையால் உடனடியாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க அரசு உத்தரவிடுவதோடு, வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

இதுகுறித்து சிதம்பரம் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் இனிப்பு கடை நடத்தி வரும் கார்த்தி என்பவர் கூறுகையில், ரூ 10 நாணயத்தை நான் தொடர்ந்து வாங்கி வந்தேன். தற்போது என்னிடம் 12 ஆயிரத்திற்கு மேல் 10ரூ நாணயம் தேங்கியுள்ளது . இதனை மீதி சில்லரையாக பொதுமக்களிடம் கொடுத்தால் அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். நாங்க வங்கிக்கு எடுத்துட்டு போனால் உங்களின் வியாபர சுழற்சிக்கு தான் கொடுத்தோம். அதை ஏன் வங்கியில் கட்ட வருகிறீர்கள் என்று வாங்க மறுக்கிறார்கள்.

 

சாதரன பெட்டிகடையில் ரூ12 ஆயிரம் தேங்கி இருந்தால் எப்படி தொழில்செய்யமுடியும். பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல் நாங்க மீதி சில்லரை 10ரூ நாணயம் கொடுத்தால் செல்லாது என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் சிலபேர் வாங்கிகொள்கிறார்கள். எனவே இந்த 10ரூ நாணயத்தை வங்கியில் வாங்கப்பட்டு பின்னர் பணம் எடுப்பவர்களிடம் கொஞ்சகொஞ்மாக கொடுத்தால் தான் இந்த பிரச்சணைக்கு தீர்வு ஏற்படும். வங்கிகளில் பொதுமக்களிடம் 10ரூ நாணயம் வாங்கவில்லை என்பதால் இது செல்லாது என்ற வதந்தி மக்களிடம் பரவியுள்ளது. இதனை போக்க அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வங்கிகளில் நாணயத்தை வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

 

- காளிதாஸ்

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கர்நாடக அரசு; எம்.என்.சி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Action order for MNC companies and Karnataka Government giving priority to Kannadas

சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்தது.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடம் தவிர பிறமொழி பேசுபவர்கள் தான், அதிகமாக வேலைக்கு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், கர்நாடகா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவனங்களின் வரவேற்பு அறையில் காட்சி பலகையாக வைக்கும்படி கர்நாடகா அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கர்நாடக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில், கர்நாடகா அரசு புதிய உத்தரவைக் கொண்டு வந்துள்ளது. அதில் கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணங்கத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து ‘கன்னட காவல்’ என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறினார். 

Next Story

‘மிக்ஜாம்’ புயல்; தனியார் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Mikjam Storm; Tamil Nadu Government Important Instructions to Private Companies

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில், புதுச்சேரியிலிருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையிலிருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரிலிருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளைத் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.