Skip to main content

ஒரே நேரத்தில் 34 ஆடுகள் திருட்டு...வாழ்வாதாரம் போச்சே...கண்ணீர் விடும் மூதாட்டி!

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

goats incident police investigation in pudukkottai district

 

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு முன்பு  வயல்வெளியில் கிடையில் அடைக்கப்பட்டிருக்கும் செம்மறி ஆடுகளை மொத்தம் மொத்தமாக லாரிகளில் திருடிச் சென்றனர். இப்படி கூட்டம் கூட்டமாக திருடப்படும் செம்மறி ஆடுகள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முந்திரிக்காடுகளில் நிற்கும். முடிந்தவர்கள் ஆடுகளை மீட்டனர். முடியாதவர்கள் இழந்து போனார்கள்.

 

கடந்த சில வருடங்களாக மொத்தமான ஆடு திருட்டுகள் குறைந்து, விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை திருடிச் செல்லும் பலர் உருவாகிவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு படை அமைத்து சிறிதளவு ஆடுகள் மீட்கப்பட்டாலும், கூட தொடர் திருட்டுகள் இன்றுவரை குறையவில்லை. வீடுகளில் ஆடுகளை திருடுவோர் அங்கு நிறுத்தி இருக்கும் பைக் பிளக் வயர்களை துண்டித்துவிட்டு திருடிச் செல்லும் நூதன வேலைகளையும் செய்கின்றனர்.

 

இன்று புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் சரகம் ஆவணம் பெருங்குடி கிராமத்தில் ஆரோக்கியசாமி - மதனமேரி தம்பதி தங்களின் வாழ்வாதாரத்திற்காக 38 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தனர். போன வாரம் பக்கத்து ஊர் வியாபாரியும் அறந்தாங்கி வியாபாரியும் வந்து குறைந்த விலைக்கு கேட்டதால், ஆடுகளை விற்காத வயதான தம்பதி இன்று அதிகாலை 02.00 மணி வரை விழித்திருந்து காவல் காத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எழுந்து பார்த்த போது கிடையின் கதவு திறந்து கிடக்க 38 ஆடுகளையும் காணவில்லை.

 

ஆடுகள் காணாமல் முதியவர்களின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தேடிய போது 2 கி மீ தாண்டி புதருக்குள் 4 ஆடுகள் பதுங்கிக்கிடந்தது. மற்ற 34 ஆடுகளும் காணவில்லை.

 

நன்கு விபரமறிந்த திருடர்கள் பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்து தூரத்தில் நின்று கொண்டு கிடையில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கிடையின் தட்டிக் கதவை  திறந்ததும் மேய்சலுக்கு போறது போல அத்தனை ஆடுகளும் சத்தமில்லாமல் வெளியே செல்ல குறிப்பிட்ட தூரத்தில் ஆள் இல்லாத இடத்தில் வைத்து மொத்த ஆடுகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

 

வாழ்வாதாரம் இழந்து கஞ்சி தண்ணீர் இன்றி கதறிக் கொண்டிருக்கும் முதிய தம்பதி மீமிசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போனவாரம் ஆடுகள் வாங்குவது போல வந்து கிடையை பார்த்துச் சென்றவர்களை அழைத்து விசாரித்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள் கிராம இளைஞர்கள். இப்படி மீண்டும் தொடர்ந்துள்ள ஆடுகள் திருட்டிற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைப்பார்களோ.. பாவம் ஏழை கிராமத்து மக்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.