Skip to main content

காணாமல்போன ஆட்டுத் தலையோடு புகார் கொடுக்கச் சென்றவரால் பரபரப்பு..!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

Goat stolen owner filed complaint in police station

 

ஆடு காணாமல்போன நிலையில், அதனைத் தேடிப் பார்த்தபோது ஆட்டின் தலை கசாப்புக் கடையில் இருப்பதைக் கண்டு, அந்தத் தலையுடனேயே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, கரம்பக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த சில மாதங்களில் பல ஆடுகள் திருடப்பட்டுள்ளது. நள்ளிரவுக்கு பிறகு அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வரும் திருடர்கள் சாலை ஓரங்களில் உள்ள வீடுகளில் நிற்கும் ஆடுகளை திருடிச் சென்றுவருகின்றனர். 

 

சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காரில் சிலர் ஆடு திருடியுள்ளனர். கொத்தமங்கலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பல ஆடுகளில் ஒரு ஆட்டை மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்ற மர்ம நபர், சத்தம் போட்ட பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 3 ஆடுகளை ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் திருடிக்கொண்டு வேகமாக  கீரமங்கலம் - குளமங்கலம் சாலையில் செல்லும்போது, பொதுமக்கள் விரட்டியும் நிற்காமல் சென்றுள்ளனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பில் சாலையோர வீட்டில் கட்டி வைத்திருந்த 3 குட்டிகளை ஈன்ற ஒரு ஆட்டை மர்ம் நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தாய் ஆட்டை காணாமல் 3 குட்டிகளும் தவித்து வருகிறது.

 

கீரமங்கலத்தில் சந்திரசேகர் என்பவரது வீட்டில் கட்டி இருந்த 2 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு திடீரென காணவில்லை. நேற்று காலை கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கறிக் கடைக்கும் சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் திருடுபோன ஆட்டை தேடிச் சென்றனர். கீரமங்கலம் கடைவீதி வேம்பங்குடி மேற்கு பகுதியில் உள்ள கறிக்கடையில் காணாமல்போன தனது ஆட்டு தலையும் கால்களும் இருப்பதைப் பார்த்த சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டுத் தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். அதிகாலை காணாமல்போன எங்கள் இரண்டு ஆட்டில் ஒன்று கறிக்கடையில் அறுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆடு திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கேட்டனர்.

 

சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் திருட்டு ஆடு வாங்கி கறிக்கடை நடத்தியவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தபோது, சிலர் இந்த ஆடுகளை கொண்டு வந்து விற்றதாகவும் திருட்டு ஆடுகள் என்பது தெரியாது என்றும் விசாரணையில் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சில ஆடுகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் ஆடுகளை திருடி கறிக்கடைகளில் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களை கீரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது மேலும் திருடப்பட்ட ஆடுகள் பற்றிய விபரம் தெரிய வரலாம். ஆட்டு தலையை வைத்து திருட்டை கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Next Story

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
thief who was involved in two-wheeler theft was arrested

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம்  திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக்  கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.