Skip to main content

அரசு பள்ளியின் மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவி; மருத்துவமனையில் அனுமதி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

girl who fell from floor government school was admitted hospital

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் - சங்கீதா தம்பதியின் மகள் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் பள்ளி மாணவிகள் நடன நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். மாணவியுடன் படிக்கும் தோழி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அப்போது அந்த தோழி மொபைல் ஃபோனை மாணவியிடம் கொடுத்து வீடியோ எடுக்கச் சொல்லியுள்ளார். அதன் பெயரில் இந்த மாணவி வீடியோ எடுத்ததாகவும், அப்போது பெண் ஆசிரியர் ஒருவர் மொபைலை பெற்றுக்கொண்டு, யார் இந்தப் பெண்ணை வீடியோ எடுக்கச் சொன்னது? என அனைத்து மாணவர்களின் முன் கேட்டு திட்டி உள்ளதாகவும், அதனால் மன வேதனை அடைந்து தந்தைக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பள்ளிக்கு வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று அந்த மாணவி கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 

அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், முதல் மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து கை, கால், இடுப்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து படுகாயமடைந்துள்ளார். அதைத்தொடர்ந்து, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

பெற்றோரிடம் உங்களது மகள் மயக்கமடைந்து முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த மாணவியின் பெற்றோரிடம் கேட்டபோது, அனைத்து மாணவர்களின் முன்பும் எனது மகளைத் திட்டியதால் மன வேதனை அடைந்து மேலே இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.

 

இச்சம்பவம் குறித்து லாலாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை முயற்சியில் கீழே விழுந்தாரா அல்லது மயக்கம் அடைந்து கீழே விழுந்தாரா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.