Skip to main content

கடலூரில் நடைப்பெற்ற பெண் குழந்தைகள் கருத்தரங்கம்.

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Girl child seminar held in Cuddalore.

 

கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "நம் நாட்டில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நமது கடலூர் மாவட்டமும் ஒன்று.

 

கடந்த 24.1.2015 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 

 

இந்த திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது. அதன்படி கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறாமல் இருத்தல், இந்தச் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல், பாலின பாகுபாடு களைதல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சமுதாய பங்கேற்பதை உறுதி செய்தல் ஆகும்.

 

கடலூர் மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்த 14 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. 683 ஊராட்சிகளில் உள்ள 2342 கிராமங்களில் பெண் ஆண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்றும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை அறிய உதவும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

Girl child seminar held in Cuddalore.

 

இந்தத் திட்டம் குறித்து பரப்புரை செய்வதற்காக 322 வளரிளம் பெண்கள் திட்ட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 513 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டத்தில் 158 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 111 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பிறப்பின் படி பெண் குழந்தைகள் பாலின விகிதம் 2015ஆம் ஆண்டு 886 ஆக இருந்தது, 2020ஆம் ஆண்டு 940 ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் குறைவாக உள்ள வட்டாரங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது.

Girl child seminar held in Cuddalore.

 

பெண் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுத்துவது தனிமனித, ஒட்டுமொத்த சமூக பொறுப்பாக கொண்டு, அனைவரும் நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமம்தான் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதை கடமையாகச் செய்யாமல் உணர்வுபூர்வமாக எடுத்துச் செல்ல வேண்டும் " என்றார்.

 

முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

 

கருத்தரங்கில் சமூக நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.