Skip to main content

பணத்திற்காக நண்பனை கடத்திய கும்பல்.. தீவிர தேடலில் காவல்துறையினர்.. 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

The gang who kidnapped a friend for money .. Police in intensive search ..

 

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் உள்ள சிங்கப்பூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர், அப்பகுதியில்  வட்டிக்கு விடும் தொழில் செய்துவருகிறார். இதன் காரணமாக அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. 

 

கிருஷ்ணவேணியின் மகன் சூரியகுமார். இவர் தனது நண்பர்களான சூர்யா, நந்தா, பெரிய பாலா, மாரி, முரளி ஆகியோருடன் அடிக்கடி டீ குடிக்க செல்வதுண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சூரியகுமாரை டீ குடிப்பதற்காக மேற்படி நண்பர்கள் வழக்கம்போல் அழைத்துள்ளனர். சூரியகுமாரும் அவர்களுடன் டீ குடிக்கச் சென்றுள்ளார். 


ஜானகி புறம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்ததும் சூரியகுமாரை ஒரு காரில் கட்டாயமாக திணித்துக் கொண்டு கரடிபாகம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சூரியகுமாரை சுற்றி உட்கார்ந்த ஐந்து நண்பர்களும், சூரிய குமாரிடம் உனது தாய் கிருஷ்ணவேணியிடம் 10 லட்சம் பணம் கேட்டு கொண்டு வரும்படி கூறுமாறு மிரட்டியுள்ளனர். மேலும், சூரியகுமாரை அடித்து மிரட்டி தாயிடம் பணம் கேட்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உயிருக்கு பயந்து போன சூர்யகுமார், தனது தாய் கிருஷ்ணவேணிக்கு போன் செய்து தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், மீட்க பணம் தரும்படியும் கேட்டுள்ளார். 


மகனின் நிலையை கேட்டு பதறிப்போன கிருஷ்ணவேணி, மாவட்ட காவல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக தாலுகா காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினர் ஆலோசனையின்படி 10 லட்சம் பணத்தை தயார் செய்தார் கிருஷ்ணவேணி. பணம் தயாராக இருப்பதாக மகனுக்கு செல்போனில் தகவல் அளித்தார். அப்போது கிருஷ்ண வேணியிடம் பேசிய கடத்தல் கும்பல், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள எல்லீஸ் சத்திரம் பகுதிக்கு தனியாக நள்ளிரவு நேரத்தில் பத்து லட்சம் பணத்துடன் வரவேண்டும் காவல்துறை உதவியை நாடினால் மகன் உயிருக்கு ஆபத்து என்றும் மிரட்டியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியபடி 10 லட்சம் பணத்துடனும், போலீசாரின் அறிவுரைப்படியும் மர்ம நபர்கள் கூறிய எல்லிஸ் சத்திரம் பகுதிக்கு கிருஷ்ணவேணி நள்ளிரவு நேரத்தில் சென்றுள்ளார். போலீசாரும் கிருஷ்ணவேணியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் இருந்து சூரியகுமாரை கீழே இறக்கினர். அப்போது போலீசார் கிருஷ்ணவேணியுடன்  இருப்பதை கண்டதும், அந்த கும்பல் தப்பி சூரியகுமாரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. 

 

மர்ம கும்பலால் தாக்குதலுக்கு ஆளான சூரியகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். சூரியகுமார் அளித்த புகாரின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப் பதிவு செய்ததோடு விழுப்புரம் டி.எஸ்.பி சிலம்பரசன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு ஆள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.