Skip to main content

கஜா 2-ம் ஆண்டு நினைவு தினம்... மாறாத வாழ்க்கை! 

Published on 15/11/2020 | Edited on 16/11/2020
 Gaja 2nd Anniversary .. Unchanging Life!

 

2018 ம் ஆண்டு நவம்பர் 15 ந் தேதி இரவு கஜா புயல் கரையை கடக்கிறது என்று வானிலை அறிவிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை அடுத்தடுத்து மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கி 11 மணிக்கு பிறகு லேசான காற்றும் வீசத் தொடங்கியது. 12 மணிக்கு பிறகு வீசிய காற்றில் கடல் காற்றின் வாசனையை உணர்ந்தார்கள் உள்மாவட்டத்தில் உள்ள மக்கள். வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்தனர். வழக்கம் போல புயல் அறிவிப்பு வரும், பிறகு வலுவிழந்து போகும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

 

1 மணிக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரிகத் தொடங்கியதும் தான் மக்களுக்கு சிறிய பதற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்து காற்றின் வேகம் அதிகரித்து தென்னை மரங்கள் மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. நீண்ட நேரம் சாய்ந்தும் உயர்ந்துமாக எழுந்த தென்னை மரங்கள் வேரோடு சாயத் தொடங்கியது. அடுத்தடுத்து மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், வேம்பு, புளி, ஆலமரம், அரசமரம் என்று அத்தனை மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல வீடுகளில் மரங்கள் விழுந்தது. பல உயர்கள் பறிபோனது. ஆடுகள் தண்ணீர் அடித்துச் சென்றது. விடியும்போது கஜாவின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்து காணப்பட்டது புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்.

 

மீனவர்களின் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து கிடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல வழியில்லை முழுமையாக மரங்கள் விழுந்து கிடந்தது. உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் சாலைகள் சீரமைக்கப்பட்டு குடிதண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுத்த நிவாரணப் பொருட்கள் பல நாட்கள் உதவியது மக்களுக்கு. அதன் பிறகு மின்கம்பங்களை சீரமைக்க இளைஞர்களை கொண்டே சீரமைக்கப்பட்டது.

 

தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை கொண்டு வந்த கொடுப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெடுவாசலில் நின்று சொல்லிவிட்டுப் போனார் ஆனால் இதுவரை ஒரு தென்னங்கன்று கூடவரவில்லை. அதேபோல வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொன்னதோடு சரி புயல் நிவாரண வீடுகள் ஏதும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.  

 

புயல் தாக்கி இரண்டு வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையிலும் கூட இழப்பீடுகளும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் அரயப்பட்டி பகுதியில் குடிதண்ணீர் எடுக்கச் சென்று மின்சாரம் தாக்கி இறந்த 2 பேருக்கு புயல் நிவாரணம் மற்றும் அரசு வேலை கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தும் இன்றுவரை எந்த நிவாரணமும் அந்தக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் தென்னை, பூ விவசாயிகள் இன்னும் பழைய நிலையை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். மீண்டும் பழைய நிலையை எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்கிறார்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.