Skip to main content

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம பெண் உதவியாளர் தரையில் அமர்ந்து போராட்டம்; நீதிமன்ற உத்தரவை மீறும் தாசில்தார்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

In front of the District Collector's office, the village assistant sat on the ground

 

நாமக்கல் அருகே, லஞ்ச வழக்கில் தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் விடுவித்த பிறகும், பணி ஆணை வழங்க மறுத்ததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் உதவியாளர் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லோகாம்பாள். இவர், கடந்த 2020ம் ஆண்டு, அதே ஊரைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரன் என்பவரிடம் நில ஆவணம் தொடர்பாக 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

 

கிராம நிர்வாக அலுவலர் சார்பில் லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருந்ததாக அவருடைய உதவியாளர் கீதாவும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், லஞ்ச வழக்கில் கீதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு 12 வார காலத்திற்குள் அதே பணியை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

 

நீதிமன்ற உத்தரவை பெற்று வந்த கீதா, அதை பரமத்தி வேலூர் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் சமர்ப்பித்து, மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, அவருக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதற்காக கீதாவை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செப். 27ம் தேதி அழைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு அவரிடம் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும், அந்த ஆவணங்களுக்கு இடையே, தங்களுடைய 'மீளப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு நிராகரிக்கப்படுகிறது' என்று எழுதப்பட்ட ஆவணத்தையும் மறைத்து வைத்து கையெழுத்துப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

 

வட்டாட்சியர் அலுவலகத்தின் இத்தகைய மோசடியான செயலைக் கண்டித்து கீதா, புதன்கிழமை (செப். 28), அந்த அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று கீதாவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தன்னிடம் மோசடியாக கையெழுத்து வாங்கிய ஆவணத்தை திருப்பிக் கொடுத்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகக் கூறினார். 


இதுகுறித்து வட்டாட்சியர் சிவக்குமார் கூறுகையில், ''கீதா சம்பந்தப்பட்ட வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளது. அதனால் அவருக்கு பணி ஆணை வழங்க முடியாது,'' என்றார். 


இந்த சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.