Skip to main content

ஹோட்டலில் வாங்கிய இட்லியில் தவளை; பதறி துடித்த நோயாளி! 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Frog in Italy bought at the hotel

 

நோயாளி ஒருவருக்குத் தனியார் உணவகத்திலிருந்து வாங்கிச்சென்ற இட்லியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அருகில் ஒரு தனியார் சைவ உணவகம் செயல்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருப்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் இந்த ஹோட்டலில் உணவு வாங்கிச் சாப்பிடுகின்றனர். 

 

இந்நிலையில், 27ஆம் தேதி காலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் உறவினர் ஒருவர் அந்த ஹோட்டலில் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு, நோயாளி முருகேசனுக்கும் 4 இட்டிலிகளைச் சுடச்சுட பார்சல் வாங்கிக்கொண்டு சென்றார்.

 

பசியோடு பார்சலை வாங்கிப் பிரித்த முருகேசனுக்கு பேரதிர்ச்சி. அவரது உறவினர் வாங்கிவந்த சூடான இட்லிக்குள் தவளை வெந்து இறந்துகிடந்ததைப் பலரிடமும் காட்டி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்தப் பார்சலை முருகேசனின் உறவினர்கள் மற்றும் அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவரும் சக நோயாளிகளின் உறவினர்களும் ஒன்றாகச் சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர்.

 

அந்த சமயத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் "என்னது இட்லிக்குள்ள தவளை இறந்து கிடந்ததா" என பதறியடித்துக்கொண்டு சாப்பாட்டு இலையைப் பாதியிலேயே மூடிவிட்டு வாயில் கைவிரலைவிட்டு வாந்தி எடுத்தனர். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர்.

 

அந்த ஹோட்டல் உரிமையாளரோ, “இதுல என் தவறு ஒன்றுமில்லை. தொடர்ந்து விடாம மழை பெய்யுது. தவளைங்க எப்படி மாவுக்குள்ள விழுந்ததுன்னு தெரியல. அவங்க வாங்கிச் சென்ற இட்டிலிக்கு உண்டான பணத்தை மட்டும் கொடுத்துடுறேன்” என கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூச்சலிட, வேறு வழியின்றி இட்லி ஊற்ற வைத்திருந்த மீதி மாவை பொது மக்கள் கண்முன்னே கீழே கொட்டிவிட்டு, “தயவுசெய்து இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என கெஞ்சிக்கேட்டுக்கொண்டே ஹோட்டலை அவசர அவசரமாகப் பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

 

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், "சுகாதாரமற்ற முறையில் அலட்சியப் போக்குடன் பல உணவகங்கள் கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் செயல்படுகின்றன. அவர்களைக் கண்கானிக்க வேண்டிய சுகாதாரத்துறை, உணவுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதன் விளைவு இப்படி நடக்கிறது. இந்தக் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு இருந்துவிடாமல், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மற்ற கடைகளில் மாற்றம் வரும். கும்பகோணம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கும்பகோணத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் சமைக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும். குறிப்பாக, நோயாளிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டல்களில் இதுபோல நடப்பதற்கு காரணம் அதிகாரிகள் ஹோட்டல்களை அடிக்கடி ஆய்வு செய்யாததுதான். இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.