Skip to main content

சுவரேறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? விஜயதரணி காட்டம்

Published on 21/08/2019 | Edited on 22/08/2019

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு சென்றனர். அப்போது அவர்கள், ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி.


பல லட்சம் கோடியை ஏமாற்றி விட்டு தப்பி சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களை பிடிப்பதற்கு இந்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது?
 

இங்கிலாந்திலும், லண்டனிலும் எந்த சுவரை ஏறி குதித்தது இந்த அரசு. ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர். முன்னாள் மத்திய அமைச்சரை மரியாதை குறைவாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவிற்கு இவர்கள் செய்கிறார்கள் என்றால் இது அரசியல் காழ்புணர்ச்சிதான்.

 

Vijayadharani


 

சிபிஐ விசாரணைக்காக இங்கே இருக்கிறவர் அவர். வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் மனு வரப்போகிறது. அதற்குள் சுவர் ஏறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? 
 

காழிப்புணர்ச்சியை இவ்வளவு தீவிரமாக நிறைவேற்றக் கூடிய இடத்தில் இந்த அரசு இருக்கிறது. ஒரு வழக்கு இருக்கிறது என்றால் அரசாங்கம் சட்ட ரீதியாக அணுகி சட்டரீதியாக அதை அமல்படுத்த வேண்டுமே தவிர, அதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஒரு  நாடகமாக இதை கையாண்டுள்ளனர்.
 

P C


 

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அரசு என்ற எண்ணத்தில் இதுபோன்று செய்கிறார்கள். இதுபோன்ற செயல் அரசிற்கு பெரிய கெட்டப் பெயரைத்தான் ஏற்படுத்தும். அரசு ஒருவரை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது. சட்டரீதியான அணுகுமுறை இருக்கிறது. அதை எல்லாம் சரியாக பின்பற்றி இதை செய்ய வேண்டும். அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். அதிகாரிகளே இப்படி செயல்படுவது மக்கள் மத்தியில் இது பெரிய கண்டனத்திற்கு உரியதாக உள்ளது.
 

இந்தியா முழுக்க பேசக்கூடிய ஒரு சம்பவமாக இது மாறிவிட்டது. இந்த வழக்கை தீவிரமாக நடத்த வேண்டும் என்று சொன்னவர்களுக்கே, இப்போது நடக்கின்ற சம்பவங்களை பார்த்து இவ்வளவு அராஜகமாக நடக்கிறதே என்று அவர் மீது இரக்கத்தை கூட உருவாக்கியுள்ளது. எதிரிகளுக்கு கூட அவர் மீது இரக்கம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம், ஜனநாயகம் எல்லாவற்றையும் மீறி நடத்தப்படுகின்ற இந்த விதத்தைப் பார்த்து அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.