Skip to main content

"வீட்டு வாடகை கட்ட முடியல; எனக்கு ஒரு வீடு ஒதுக்கித் தர முடியுமா?" - கலெக்டரிடம் மனு கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.!

Published on 15/02/2021 | Edited on 16/02/2021

 

former mla petition madurai collector request for house

 

மதுரை மாவட்டம், மேல பொன் நகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். இவர் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். பதவிக் காலத்தில் அரசியலிலும் சரி, சட்டமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் போதும் சரி, நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றியவர் என்று மாற்றுக் கட்சியினரால் பெயர் பெற்றவர். இந்த நிலையில் நன்மாறன் இன்று (15/02/2021) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். மதுரை மாவட்டக் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று மனு கொடுப்பதற்காகக் காத்திருந்தார். அங்கு அவரை அடையாளம் கண்டறிந்த சிலர் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரியிடம் அறிமுகப்படுத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில் "நான் இப்போது மதுரை மேல பொன் நகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை. இதனால் மாத மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன். எனவே மதுரை ராஜாக்கூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த நன்மாறன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் இப்போது மதுரை மேல பொன் நகரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு நிரந்தரமாகக் குடியிருக்க வீடு இல்லை. எனவே மதுரை ராஜாக்கூரில் அரசாங்கம் சார்பில் கட்டித்தரப்படும் குடியிருப்பில் இலவச வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளேன்" என்றார்.

 

மேலும், அவரிடம் நீங்கள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள், உங்களுக்கு சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், கட்சியிலும், நண்பர்களிடமும் உதவி ஏதும் கேட்டீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சிரித்துக்கொண்டே நான் யாரிடமும் கேட்கவில்லை எனத் தெரிவித்துவிட்டு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார். இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தும், நன்மாறன், தனக்கு வீடு ஒதுக்கித் தரும்படி மனு கொடுக்க வரிசையில் நின்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

 

வட்டச் செயலாளர் வண்டு முருகனே பேஜ்ரோ காரில் வலம் வரும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வா எனக் கூட்டத்தில் நின்ற பலரும் பேசிக் கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.