Skip to main content

“அதிமுகவில் இருந்து யாரையும் வெளியேற்றவில்லை; அவர்களாகவேதான் சென்றார்கள்” - கே.சி.வீரமணி

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Minister KC Veeramani comments on Sasikala and Panneerselvam

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய திருப்பத்தூர் மாவட்டச்செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி.வீரமணி, “வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தோல்வியுறக் காரணம், அவர் அதிமுக ஆகிய எங்களைத் துரோகி என்றும், எங்களுடைய வெறுப்பை அதிகமாகச் சம்பாதித்து விட்டார். இல்லையென்றால் அவருக்கு இன்னும் கூடுதலான வாக்குகள் கிடைக்க வாய்ப்புகள் இருந்தது. ஏசி சண்முகத்தின் செயல்பாடு, போக்கு தான்தோன்றித்தனமான பேச்சுகள் தான் அவர் தோல்வியடையக் காரணமாக அமைந்தது. அவருக்கு வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அனுதாபம் இருந்தது. இதையே தான் பத்திரிகைகளும் தெரிவித்து இருந்தன. அதிமுகவோடு அவர்கள் இருந்திருந்தால் 100% நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரைக்கும் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸ் அல்லது பிஜேபியா என பார்ப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் மக்கள் பிஜேபியை பெரும்பான்மையாக விரும்பவில்லை. மோடி வருகை மற்றும் அண்ணாமலையின் யாத்திரை, இராமர் கோவில் கட்டியது இதெல்லாம் மதவாதத்தைக் கொஞ்சம் பலப்படுத்தி மத உணர்வை அதிகப்படுத்தியதால் இந்த முறை கூடுதலாக பாஜாகாவிற்கு தமிழகத்தில் வாக்குகள் கிடைத்துள்ளது என்பதுதான் என்னுடைய கருத்து.

இதே போல கடந்த 2014 இல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தி நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டோம். இதை மக்கள் உணர்ந்து வாக்களித்ததால் தான் 38 சீட்டுகளை வெற்றி பெற்றோம். இந்த முறை நாங்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை என மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அதிமுகவை மக்கள் வெறுக்கவில்லை, திமுகவை மக்கள் வெறுத்து இருந்தாலும் அந்த வாக்குகளை மத்தியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரசுக்கு அளித்து விட்டார்கள். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் தான் அதிகமாக இந்த முறை பாஜகவிற்கு சென்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்தது இந்தச் சூழலில் அப்போது மத்திய அரசான பாஜகவை எங்களால் எதிர்க்க முடியவில்லை. மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் அவர்களோடு அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவானது. பாஜகவும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்தார்கள். அதனால்தான் 11 மருத்துவ கல்லூரிகளையும், ஒன்பது புதிய மாவட்டங்களையும் உருவாக்க முடிந்தது” என்றார்.

விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறித்துக் கேட்டதற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சரி, கலைஞரும் சரி அவர்கள் காலகட்டத்தில் இடைத் தேர்தலைப் புறக்கணித்து இருக்கிறார்கள். அண்மையில் ஈரோடு இடைத்தேர்தல் எப்படி நடந்தது என மக்களுக்கு நன்றாகத் தெரியும். அரசியலில் சுதந்திரத்திற்குப் பிறகு எந்த கட்சியும் செய்யாத செயலை ஈரோடு இடைத் தேர்தலில் திமுக செய்தது. இதைச் செந்தில் பாலாஜியின் பார்முலா என்றார்கள்.  மக்களைத் தெருத் தெருவாகச் சென்று சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள், காம்பவுண்ட் அமைத்து மக்களை ஆடுகளைப் போல் அடைத்து வைத்தார்கள். இதையெல்லாம் பார்த்துத் தான் இந்த தேர்தலை நாங்கள் புறக்கணித்து உள்ளோம். இன்றைக்குப் பல ஊடகங்கள் பாதி திமுக பக்கமும், பாதி பாஜக பக்கமும் உள்ளது. நடுநிலையாக மக்களின் மனநிலையை யாரும் சொல்வது இல்லை. 

அதிமுக ஒருங்கிணைக்க வேண்டுமென எந்தத் தொண்டன் கூறுகிறான்? எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்? ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன் வைத்தோம். அப்போதுதான் ஜெயலலிதா இருந்தது போல் செயல்பட முடியும் எனக் கூறினோம். ஆனால் ஓபிஎஸ் உட்பட ஒரு சிலர் அவர்களாகவே தான் வெளியே போனார்கள் நாங்கள் யாரையும் போக சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் இவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள சொல்கிறீர்கள். வெளியில் இருப்பவர்கள்தான் திமுகவிற்கு சாதகமாகவும், பிஜேபிக்கு சாதகமாகவும் என அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். வேறு வேறு கூட்டணியில் நின்று தோல்வியுற்ற பிறகு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

இப்போது அவர்கள் தான் சொல்ல வேண்டும் நாங்கள் ஆதரவு தருகிறோம், எப்போது தேவைப்பட்டாலும் உங்கள் அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம், எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவிற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று. சசிகலா, ஓபிஎஸ் உட்பட பிரிந்துப் போன அனைவரும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதைச் சொல்ல வேண்டும். இப்போது கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என அறிக்கை விடுபவர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் ஒருங்கிணைய தயாராக இருக்கிறோம் என அறிக்கை விட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் அனைவரும் செயல்பட தயாராக உள்ளோம், நாங்கள் வருகிறோம் என அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர வேண்டும் எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால் அவர்களிடம் தலைமையை கொடுக்க சொல்கிறார்களா என எங்களுக்குப் புரியவில்லை?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி முதல் தமிழகம் முழுவதும் அலை இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மக்கள் மாநில அரசு குறித்து யோசிக்காமல் மத்தியில் யார் வரவேண்டும் என யோசித்ததால் இந்த முடிவு வந்துள்ளது. ஆனால் வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை பொறுத்திருந்து பாருங்கள் இதே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகப்படியான சட்டமன்றத் தொகுதியை வென்றெடுத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டோம். 

துரைமுருகன் தனது மகனை ஜெயிக்க வைப்பதற்காக படாத பாடு பட்டு ராத்திரி பகலாக சுற்றித்திரிந்தார். அதை நானே பார்த்தேன். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. இது முதல்வருக்கும் தெரியும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Resign the post and let politics talk  E.P.S. Emphasis

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவை விதி 56இன் கீழ் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார். இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி சபாநாயகர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும். 

Resign the post and let politics talk  E.P.S. Emphasis

கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து அவையில் எதிர்க்கட்சி பேசுவதை ஆளும்கட்சி விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்?. சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு. மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“அதிமுக வீண் விளம்பரம் தேடுகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் விளாசல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
CM MK Stalin says ADMK is looking for advertisement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள்  காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார்.

சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

சபாநாயகரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு”எனத் தெரிவித்தார்.