Skip to main content

பட்டியல் சமூக வாலிபரை அவமானப்படுத்திய முன்னாள் திமுக நிர்வாகி கைது! 

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Former DMK executive arrested for humiliating youth!

 

சேலம் அருகே, மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்ட பட்டியல் சமூக இளைஞரை, சாதிய வன்மத்துடன் முன்னாள் திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பிரவீன்குமார் (22). கூலித்தொழிலாளி. அப்பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் தற்போது திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், ஜன. 26ம் தேதி இரவு 8.30 மணியளவில், பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது கோயிலுக்கு வெளியே அமர்ந்து இருந்த வெங்கடாசலம், கூழை கவுண்டர் ஆகிய இருவரும், ''நீ ஏன்டா கோயிலுக்குள் வந்தாய்? உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாதுனு சொல்லி இருக்கிறோம்ல'' என்று கூறி, அவரை அடிக்கப் பாய்ந்தனர். 

 

இதையடுத்து, மறுநாள் காலை (ஜன. 27) கோயில் வாசலுக்கு வந்த சேலம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கத்தின் முன்பு, பிரவீன்குமாரை சிலர் அழைத்துச் சென்று நிறுத்தினர். அங்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், கூழை கவுண்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது மாணிக்கம், வாலிபரை பார்த்து ஆபாச சொற்களால் திட்டியுள்ளார். ''உன்னை யாருடா கோயிலுக்குள் போகச்சொன்னது? நீங்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது? தொலைச்சுடுவேன்'' என்று மிரட்டியபடியே வாலிபரை நெஞ்சில் தாக்கியுள்ளார். 

 

அங்கு பலதரப்பட்ட சமூகத்தினரும் கூடிவிட்ட நிலையில், அப்போதும் ஆக்ரோஷம் அடங்காதவராக மாணிக்கம் அந்த வாலிபரை பதிவு செய்யவே முடியாத அளவிற்கான சொற்களால் திட்டித்தீர்த்தார். கூடியிருந்த பொதுமக்களும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. அப்போது வெங்கடாசலம் என்பவரும் பிரவீன்குமாரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, “இவனை சும்மா விடக்கூடாது” என்றும் மிரட்டினார். 

 

இதையடுத்து பிரவீன்குமாரும், அவருடைய பெற்றோரும் மாணிக்கம் உள்ளிட்ட பிரமுகர்களிடம் மன்னிப்பு கேட்டு, இத்தோடு விட்டுவிடும்படி கெஞ்சினர். அப்போது அவர்கள், இனி ஒருமுறை கோயிலுக்குள் நுழைந்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் தெற்கு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூழை கவுண்டர் உள்ளிட்ட பத்து பேர் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பிரவீன்குமார் இரும்பாலை காவல்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜன. 30) புகார் அளித்தார். 

 

இந்த புகாரின்பேரில், இரும்பாலை எஸ்.ஐ. சீனிவாசன், மாணிக்கம் உள்ளிட்டோர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள், குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாணிக்கத்தை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

 

இது ஒருபுறம் இருக்க கோயிலுக்குள் நுழைந்ததை கண்டித்து, பிரவீன்குமாரை மாணிக்கம் மிரட்டும் காணொளி காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை (ஜன. 30) வேகமாக பரவியது.

 

வேங்கைவயல் சம்பவத்தின் சூடு தணிவதற்குள் இப்படியொரு சம்பவம் பொதுவெளியிலும், அரசியல் களத்திலும் சலசலப்பை கிளப்பியதால், சம்பந்தப்பட்ட வாலிபரிடம் இருந்து காவல்துறையினர் புகாரைப் பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வேக வேகமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

இதற்கிடையே, மாணிக்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகே அவர் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.