Skip to main content

அடிதடியில் முடிந்த முறையற்ற உறவு; கைதான முன்னாள் டி.ஜி.பி.யின் மருமகள்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Former DGP Tilakwadi daughter-in-law arrested

 

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அண்ணாநகரில் பிரபல மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் உள்ள உணவகத்தில் கடந்த மாதம் அக்டோபர் 25 ஆம் தேதியன்று மதியம் 2 மணியளவில் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு ஆணும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஒரு ஆண் உள்பட 2 பெண்கள் அவர்களைச் சரமாரியாகத் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலில் அந்த 55 வயது பெண் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்தார். அந்த ஆணுக்கும் அடி விழுந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த அந்தப் பெண்ணை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த மாலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மாலுக்குள் இருந்த நபர் தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபுதிலக் என்பதும் உடன் இருந்த பெண் ஒரு டாக்டர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை மாலுக்குள் புகுந்து தாக்கியது பிரபுதிலக்கின் மனைவியான ஸ்ருதி மற்றும் அவரது பெற்றோர் எனத் தெரியவந்தது.

 

இதுகுறித்து முன்னாள் டிஜிபியின் மகன் பிரபுதிலக்கிடம் நாம் பேசியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்களைக் கூறினார். அவர் கூறும்போது, “எனக்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு சேலத்தில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 15 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். திருமணம் ஆவதற்கு முன்பு தான் எம்சிஏ படித்துள்ளதாக ஸ்ருதி என்னிடம் கூறினார். ஆனால், அவர் படித்தது வெறும் பிபிஏ மட்டும் தான். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

எனக்கு திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் என்பதால் சாட்டை, வால்டர் போன்ற திரைப்படங்களைத் தயாரித்துள்ளேன். அதன்பிறகு, என் வீட்டில் எல்லாரும் நன்றாகப் படித்தவர்கள் என்பதால் ஸ்ருதியை வழக்கறிஞர் ஆக்கலாம் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவில் ராஜீவ்காந்தி சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. படிக்க வைத்தோம். இந்நிலையில், ஸ்ருதியின் உடல் பருமனாக இருந்ததால் ஜிம்முக்கு போக ஆரம்பித்தார். அப்போது, ஜிம்முக்கு வந்த மகேஷ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது முறையற்ற உறவாக மாறி இருந்தது. இந்தத் தகவல் அரசல்புரசலாக என் காதுக்கு வந்தது. ஒரு கட்டத்தில், என் வீட்டிலேயே, அதுவும் என் படுக்கை அறையிலேயே, இருவரும் கையும் களவுமாக சிக்கினர். அந்த வீடியோவும் என்னிடம் ஆதாரமாக உள்ளது.

 

பின்னர், நமக்கு வயதுக்கு வந்த பெண்குழந்தை இருக்கிறார் என்று, ஸ்ருதிக்கு புத்தி சொல்லி என் குழந்தைகளுக்காக அவரை மன்னித்து வாழத் தொடங்கினேன். ஸ்ருதி வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு தினமும் ஐகோர்ட் சென்று வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் ஒரு ஆண் நண்பருடன் முறையற்ற உறவில் இருந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால், நான் அதை கண்டுகொள்ளவில்லை. அவள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். இருந்தபோதிலும், ஏதோ ஒரு பிரச்சனையைக் கூறிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதி அடிக்கடி வீட்டில் இருந்து காணாமல் போவார். திடீரென வீட்டில் இருந்த 16 லட்சம் பணத்துடன் காணாமல் போனார். அவளுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

அதன் பிறகு, ஸ்ருதி வேலை செய்யும் இடத்தில் வழக்கறிஞர் ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த விவரத்தையும் நான் ஆதாரத்துடன் வைத்துள்ளேன். இந்நிலையில், செப்டம்பர் 28 ஆம் தேதி சேலம் போலீசில் என் மீது அவதூறாக புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சேலத்தில் உள்ள எனது குடும்ப நண்பரான டாக்டர் குடும்பத்தாரிடம் ஸ்ருதி 8 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வாங்கிய விவரம் தெரியவந்தது. இதைப்பற்றி கேட்டதால் எனக்கும் அந்த பெண் டாக்டருக்கும் தொடர்பு இருப்பதாக அவதூறாக செய்தி பரப்பி வந்தார். அந்த பெண் டாக்டர் எனது குடும்ப நண்பர் மட்டுமல்ல, நான் மேற்படிப்பு படிக்கும்போது எனக்கு லக்சரராக இருந்தவர். மேலும், அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். அவரிடமே பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல், அபாண்டமாக, ஆபாசமாக ஸ்ருதி பேசி வருகிறார்.

 

Former DGP  thilagavathidaughter-in-law arrested

 

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரபல மாலில் புதிய மருத்துவமனை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஸ்ருதி மற்றும் அவர் தந்தை கண்ணுசாமி மற்றும் அவர் தாயார் உஷா ஆகியோர் குடும்ப நண்பரான அந்த பெண் டாக்டரை கொலை வெறியுடன் தாக்கினார்கள். இந்த சம்பவம் முழுக்க அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனால் தற்போது புகார் கொடுத்துள்ளோம். அதன் பெயரில் ஆய்வாளர் சிபுகுமார் மற்றும் பெண் காவலர்கள் ஸ்ருதி மற்றும் அவர்களது குடும்பத்தினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்” என பிரபுதிலக் தெரிவித்தார்.

 

இதுகுறித்து ஸ்ருதியிடம்  கேட்ட போது, “இருவருக்குமே நீண்டகாலமாக சண்டை தான், ஒரு முறை நூறுக்கு போன் செய்து விருகம்பாக்கம் போலீஸ் வந்து பிரச்சனையை முடித்து வைத்தார்கள். அந்த கோபத்தில் இல்லாத பொய்யெல்லாம் சொல்றாரு. இவருக்கும் சரண்யா என்ற ஒரு பொண்ணுக்குமே தொடர்பு இருக்கு. அந்த விஷயம் அவருடைய டிஜிபி அம்மாவுக்கே தெரியும். அந்த சேலத்து பெண் டாக்டர் என் கணவருக்கு அனுப்பிய மெசேஜ் எல்லாமே என்னிடம் இருக்கு” எனத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக முன்னாள் டிஜிபி திலகவதி பேசும்போது, ''இந்தப் பெண்ணால் என் மகனின் வாழ்க்கையே சீரழிந்து போனது. தற்போது உள்ள சூழலில் நான் பேச விரும்பவில்லை” என முடித்துக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.