Skip to main content

கஜா புயலை காரணம் காட்டி உயிர் மரங்களை வெட்ட அனுமதிக்கும் வனத்துறை

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

கஜா புயலில் சாய்ந்த வனத்துறைக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புடைய மரங்களை சிலர் அதிகாரிகளின் துணையோடு வெட்டி கடத்தி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை குரல் எழுப்புகிறார்கள்.

 

gaja cyclone

 

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவில் பல வகை மரங்கள் கொண்ட வனம் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் மரங்கள் வேருடனும், கிளைகள் முறிந்தும் சாய்ந்தன. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர், அந்த மரங்களை அப்புறப்படுத்துவதுபோல்,  உயிருடன் இருக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தரமான மரங்களையும் நூற்றுக்கணக்கில் வெட்டி  கடத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "எங்கள் ஊரில் வனத்துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்தில் பல வகையான மரங்கள் உள்ளன. இதில் கஜா புயலில்  ஒரு சில நாட்டு மரங்கள் மட்டுமே வேருடன் சாய்ந்தன. இங்குள்ள ஒருவரின் உதவியோடு இங்குள்ள ஒருவருக்கு குறைந்த விலைக்கு மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அவரோ உயிருடன் இருக்கும் மரங்களையும் வெட்டி எடுத்துச்செல்கிறார். இது இங்குள்ள அதிகாரிகளுக்கும் தெரியும் கையூட்டு பெற்றுக்கொண்டு இதுபோல் செய்ய உதவுகின்றனர்" என்கிறார்.
 

அதிகாரிகளோ, "கஜா புயலில் சில மரங்கள் விழுந்துவிட்டன. அந்த மரங்களை அரசு விலைக்கு மதிப்பீடு செய்து ஏலமிடுவது வழக்கம். உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும், ஏலம் விட்டால் போட்டி வரும் என்பதாலும் தனி நபர் ஒருவரிடம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உயிருடன் இருந்த சில மரங்களையும் வெட்டியுள்ளனர்.  சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து 97 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்" என்கிறார்.
 

இது தான் சிறு மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் முறையா, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை கடத்திவிட்டு வெரும் 97 ஆயிரம் அபராதம் விதிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.