Skip to main content

இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி' -இருப்பவர்கள் வைத்தால் இல்லாதவர்கள் எடுத்துக் கொள்வார்கள்!!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

The 'food bank' created by the youth

 

அய்யா பசிக்குது என்று கடைக்கடையாக வருவோருக்கு ஒருவேளை உணவுக்கான பணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அப்படியானவர்களின் பசியைப் போக்க இளைஞர்களாக இணைந்து அறந்தாங்கியில் உணவு வங்கியைத் திறந்துள்ளனர். தொடங்கிய நாளிலேயே வரவேற்பைப் பெற்றுள்ளது 'உணவு வங்கி'.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆபிஸ் ரோடு லட்சுமிவிலாஸ் வங்கி எதிரில் இந்த உணவு வங்கி இளைஞர்களால் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடிப் பெட்டியில் உணவுப் பொட்டலங்களை வைத்து விடுகிறார்கள். பசிக்கும் யாராக இருந்தாலும் வந்து உணவுப் பொட்டலத்தை எடுத்துச் செல்கிறார்கள். இன்று (21.09.2020) காலை தொடங்கிய உணவு வங்கியில் பலர் காலை, மதியம் வைக்கப்பட்ட உணவுகளை எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சிய உணவுப் பொட்டலங்களை மாலையில் கோவிலில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கி உள்ளனர்.

உணவு வங்கி தொடங்கியவர்களில் ஒருவரான சிவக்குமார் பேசுகையில், ''ஒவ்வொரு நாளும் பலர் பசிக்கிறது என்று கடைக் கடையாக ஏறி இறங்கி போறாங்க. அதனால தான் இளைஞர்களாக ஆலோசித்து உணவு வங்கி திறக்க முடிவெடுத்தோம். அதன்படி கண்ணாடிப் பெட்டி தயார் செய்து அதில் காலை டிபன், மதியம் சாப்பாடு வைத்தோம். பசி என்று வருவோர்களிடம் இதில் உணவு உள்ளது என்று சொன்னதும் போய் எடுத்துச் சென்று பசியாறிச் சென்றனர். இதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ந்தோம். இந்தப் பெட்டியில் உணவு வைக்க விருப்பம் உள்ளவர்கள் கொண்டு வந்து வைக்கலாம். தேவைப்படுவோர் திறந்து உணவை எடுத்துக் கொள்ளலாம். முதல் நாளில் 10 பேருக்கு மேல் உணவு எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து செயல்படுத்த இருக்கிறோம்'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.