Skip to main content

வடகிழக்கு பருவமழைக்கு முன்பே பயிர்களை அழித்த வெள்ளம்; விவசாயிகள் வேதனை

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Floodwaters destroyed crops before northeast monsoon

 

தீபாவளிக்கு முன்பு பெய்த மழையினால் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிவதற்குள் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோரைத்திட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் கழிமுனைப் பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் பெய்து வரும் மழை வெள்ளம் முற்றிலுமாக இந்த பகுதி வழியாகவே கடலில் வடியும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, தென்மேற்கு பருவமழையினால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆறு முறை கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடைக்கோடி கிராமங்களில், 1200 ஏக்கர்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நேரடி விதைப்பு மற்றும் நடவு சம்பா பயிர்கள், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கால் தண்ணீர் சூழ்ந்து இருந்தன. தேங்கியிருந்த  தண்ணீர் வடிய முடியாமல் 10 நாட்களுக்கும் மேலாகப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தன.

 

கடந்த நான்கு நாட்களாகக் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் விளைநிலங்களில் தேங்கியிருந்த தண்ணீரும் வடியத் தொடங்கியது. அழுகிய பயிர்கள் போக எஞ்சிய பயிர்களைக் காப்பாற்ற உரங்கள் இடும் பணிக்கு விவசாயிகள் தயாராகி வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

"கடந்த ஆண்டு இதேபோல் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பயிர்க்காப்பீடு செய்தும் காப்பீட்டு நிறுவனமும் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர். கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்காததால் இந்த ஆண்டு கடனை வாங்கி சாகுபடியைத் தொடங்கினோம். தொடக்கத்திலேயே அழித்துவிட்டது. இந்த ஆண்டு காப்பீட்டுத் தொகை கட்டுவதற்குக் கூட மிகுந்த சிரமம் ஏற்பட்டிருக்கிறது." என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.