Skip to main content

மீனவ பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

fisher women incident in ramanathapuram

 

ராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடல்பாசி எடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற நிலையில் மாலை வரை ரேணுகா வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வடகாடு காட்டுப்பகுதியில் அரை நிர்வாண  நிலையில் ரேணுகாவை எரிந்த நிலையில் சடலமாக மீட்டனர்.  அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அதேபகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்துவரும் வடமாநில இளைஞர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

fisher women incident in ramanathapuram

 

 

அதில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதோடு தீவைத்தனர். அந்த 6 வடமாநில இளைஞர்களையும் பொதுமக்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் கொலையான ரேணுகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்ப போலீசார் முற்பட்ட போது முதலில் கொலையாளிகள் மீது  நடவடிக்கை எடுங்கள் என அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் ரேணுகாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்ததும் தெரியவந்தது.

 

fisher women incident in ramanathapuram

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வடகாடு பகுதிகளில் இயங்கி வரும் இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இறால் பண்ணைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். மீனவ கிராம பெண் வடமாநில இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.