A female prisoner escaped from Puzhal Jail; Wardens suspended

இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட சிறையாக கருதப்படும் புழல் சிறையில் இருந்தே பெண் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரிய சுற்றுச்சுவர்கள், போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு என பல்வேறு வசதிகளைக் கொண்டது புழல் சிறை. சிறையின் நுழைவாயில் பகுதியிலேயே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுபெண் கைதி ஒருவர் புழல் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளது புழல் சிறை வட்டாரத்தையே கலங்கடிக்க செய்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் வீடுகளில் புகுந்து திருடிய புகாரில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் சூளைமேடு பகுதியில் வீட்டில் திருட முயன்றபோது சூளைமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயந்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், பெண்கள் சிறையில் இருந்த ஜெயந்தி புதன்கிழமை காலை சிறையில் இருந்து தப்பியது தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த விவகாரத்தில் சிறை வார்டன்ங்கள் கோகிலா, கனகலட்சுமி ஆகிய இருவரை புழல் சிறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், பெண் கைதிகளுக்கான பார்வையாளர் அறையில் உள்ள கதவு வழியாக ஜெயந்தி தப்பியது தெரியவந்துள்ளது .தொடர்ந்து ஜெயந்தியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.