Skip to main content

விபத்தில் பலியான தந்தை, மகள் - உறவினர்கள் சாலை மறியல்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Father and Daughter passed away in accident

 

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகில் உள்ள சேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம்(58). இவரது மகள் தேன் குழலி(25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், இரவு 9 மணி அளவில் திருக்கனூர் கடைவீதியில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தங்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை நீலமேகம் ஒட்டிக் கொண்டு வந்தார். 

 

இந்நிலையில், கொடுக்கூர் ஏரிக்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே கருங்கல் ஏற்றிவந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் தூக்கி எறியப்பட்ட தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற லாரியை உடனடியாகக் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி இரவு 11 மணி அளவில் மறியலைக் கைவிட்டனர்.

 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை 8 மணி வரை விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் கண்டுபிடிக்காததால் கோபமுற்ற கிராம மக்கள், இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்ன சபாபதி மற்றும் அப்பகுதி ஒன்றிய சேர்மன் வாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அப்போது மக்கள், ‘லாரியை பறிமுதல் செய்ய வேண்டும். டிரைவரையும் கைது செய்து ஜாமீனில் வரமுடியாத அளவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் திருவக்கரை சாலை பகுதிகளில் டிப்பர் லாரியால் விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி உள்ளனர். அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். 

 

அதேசமயம், விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியையும், அதன் டிரைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று நீலகண்டனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்வதை மருத்துவர்கள் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.