Skip to main content

“இரண்டு அமைச்சர்கள் அரசு திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து  ராஜினாமா செய்ய வேண்டும்” - சி.வி.சண்முகம்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Fasting struggle against the DMK government tindivanam

 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக சுமார் 1502 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தத் திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்தது.

 

இதைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி. சண்முகம் தலைமையில் 27 ஆம் தேதி திண்டிவனத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Fasting struggle against the DMK government tindivanam

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய எம்.பி சண்முகம், “அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க அரசு ரத்து செய்து வருகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.  தமிழகத்தில் கமிஷன் அரசு தான் நடக்கிறது. கமிஷன் பெரும் ஏஜெண்டாக அதன் அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

 

பினாமி பெயரில் உள்ள பல்கலைக்கழகங்களை நடத்த அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களை ஸ்டாலின் மூடி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். இங்கு சில ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்படுகிறது. அந்தக் கால கட்டங்களில் குடிதண்ணீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும்  சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே தான் மாவட்ட மக்களின் நலனை முன்னிட்டு நல்ல தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் திண்டிவனம் போன்ற நகராட்சிகளும், மரக்காணம், கோட்டகுப்பம், செஞ்சி, அனந்தபுரம், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளும் 692 ஊராட்சிகளும் பயனடையும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சேலம் மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.

 

இது சிக்கலானது நடைமுறை, சாத்தியம் இல்லாதது. திமுக அரசு லஞ்சம் பெறுவதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் அரசு திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அதற்கான தேர்வு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் செம்மண் கொள்ளை அடிப்பது யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.