Skip to main content

அழுகும் தக்காளிக்கு விலை கூறும் முதல்வர் பழனிசாமி அவர்களே, எங்களுக்குப் பதில் சொல்லுங்க..! -விவசாயிகள் கேள்வி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

 Farmers question to tn cm

 

மத்திய பா.ஜ.க.மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து நாடு முழுக்க எதிர்க்கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் கொந்தளித்துப் போராட்டங்களில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், மதுரை சுற்றுப் பயணத்தின் போது, இம்மசோதாவை ஆதரித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வினரே பட்டியலிடத்தைப் பட்டியலிட்டு இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றார். அதற்கு அவர் கூறிய எடுத்துக்காட்டு கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் போடுவது போல என்று கூறி, அதில் தக்காளியையும் உதராணம் காட்டினார். இதற்கு எதிர் விளைவாக விவசாயிகளிடமிருந்து கோபக் குரல் எதிரொளிக்கிறது.

 

 Farmers question to tn cm


"கரும்பு ஆலைகளுடன் ஒப்பந்தம் போட்டு கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு இதுவரை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 1,800 கோடியை  வாங்கித் தர வக்கற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்த முறை விவசாயம் பற்றி ஓதுவது, பேசுவது கேலிக் கூத்தானது..." எனக் கடுமையாகக் கொதிக்கிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

 

 Farmers question to tn cm


தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே. பொன்னையன் மற்றும் கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி.) ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் நம்மிடம் பேசுகையில்,

"தமிழகத்திலுள்ள 40 க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்த முறையில்தான் கரும்பு விவசாயிகள் பயிர் செய்து, அரசு தீர்மானித்த விலைக்கு ஆலைகளுக்கு கொடுக்கின்றோம். கரும்பு அறுவடை முடிந்த 15 நாளில் விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான பணத்தை ஆலைகள் கொடுக்க வேண்டும். தவறினால் 15 சதவீதம் வட்டி போட்டுக் கொடுக்க வேண்டும். இதுதான் ஒப்பந்த முறை. ஆனால் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு தராமல் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1,800 கோடி நிலுவை வைத்துள்ளனர் சர்கரை ஆலை நிர்வாகங்கள். 

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு சர்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு தெரியுமா?  ரூபாய் 15,000 கோடியாகும். இதில் உத்திரபிரதேசத்தில் மட்டுமே நிலுவை தொகை ரூபாய் 12,000 கோடி. இது 1966 ஆம் ஆண்டு சர்க்கரைக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி தான், இந்த ஒப்பந்தம் உள்ளது. அப்படித்தான்  விவசாயத்தில் ஈடுபட்டோம். அந்தச் சட்டப்படி வருவாய் மீட்பு சட்டத்தைப் பயன்படுத்தி (Revenue Recovery Act)  ஒவ்வொரு மாவட்ட அரசு நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பணம் தரவில்லை என்றால் சர்க்கரை ஆலைகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என உள்ளது.

ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட நிர்வாகத்திடம் அதாவது கலெக்டரிடம் முறையிட்டோம். பல வடிவங்களில் போராடி விவசாயிகள் துயரை அரசுக்கு எடுத்துச் சொன்னோம். மாவட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒப்பந்தப்படி எந்த சர்கரை ஆலை மீதும் நடவடிக்கை இல்லை. ஆம்  இன்னும் பணம் வந்து சேரவில்லை. இப்படி ஒரு பயிருக்கே ஒப்பந்தப்படி பணம் பெற்றுத்தராத இந்த அரசு, எல்லா விளை பொருளுக்கும் கம்பெனிகளிடம் பணம் வாங்கிக் கொடுப்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.
 

இப்பொழுது அரசே முறையாக நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்க தமிழக முதல்வர் அவரது வாய் இனிக்க, இனிக்க பேசுகிறார். "கம்பெனிகள் தக்காளி கிலோ ரூபாய் 40 க்கு ஒப்பந்தம் செய்து விளைச்சலின்போது சந்தைவிலை ரூபாய் 30 என்று இருந்தாலும் ஒப்பந்தப்படி கிலோ ரூபாய் 40 க்கே கொள்முதல் செய்வார்களாம்." அடேங்கப்பா அந்த கம்பெனி ரூபாய் 10 நட்டமடையுமாம்... என்ன வேடிக்கை? 

 

 Farmers question to tn cm

 

நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று வாய் கூசாமல் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுவது விவசாயிகனின் தலையில் கல்லைப் போடுவதற்குச் சமம். ஒட்டு மொத்த விவசாயிகளும் முதல்வரிடம் கேட்பது மிக இலாபம் ஈட்டும் நிலையிலேயே சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ஒப்பந்தப்படி பணம்கொடுக்காமல் உள்ளனர்.

தற்போது உள்ள சட்டப்படியே நடவடிக்கை எடுக்காத இந்த அரசுகள் அழுகும் தக்காளிக்கு கம்பெனிகளிடம் பணம் வாங்கித்தரும் என்பது மோசடியான பிரச்சாரமாகும். விவசாயிகள் அமைப்பாக இல்லை. ஒப்பந்தம் செய்யும் பெரு நிறுவனங்கள் பெரிய கட்டமைப்பை வைத்துள்ளது. இன்றைய சந்தை முறையிலேயே பலன் பெற முடியாத விவசாயிகள் கார்பரேட் சந்தையில் பயன் பெறுவது நடக்காத ஒன்றாகும். அதற்காக தான் திரும்ப கூறுகிறோம் தமிழக முதல்வர் திரும்ப, திரும்ப விவசாயி எனக் கூறிக்கொண்டு வேளாண்துறையை கார்பரேட்களுக்கு காவு கொடுப்பது வரலாற்றில் பெரும் துரோகமாகவே மாறும். விவசாயிகள் சங்கம் யாரும் முதல்வர் சொல்வது போல கோரிக்கை எதையும் வைக்கவேயில்லை. அப்படியிருக்க இது விவசாயிகள் மீது திணிக்கப்படுகிறது.

 

Ad


மூன்று வேளாண் பகை சட்டங்களும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழித்து விடும். எனவே இது ஒரு மாபெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும்..." என்றனர்.

கரும்பு என்ற ஒரு விவசாயப் பயிருக்கே ஒப்பந்தம் போட்ட விவசாயிக்கு கரும்பு ஆலைகள் முழுமையான பணம் தராமல் ஏமாற்றி வரும் நிலையில் அதுவும் நமது ஊர் கரும்பு ஆலை முதலாளிகள் நடத்திவரும் இந்த ஆலைகளிலேயே இப்படியிருக்க, நூற்றுக்கணக்கான விவசாயப் பொருட்களுக்கு கம்பெனிகள் விலை கொடுக்கும் என ஒப்பந்தம் முறைக்கு தமிழக அ.தி.மு.க அரசு வக்காலத்து வாங்குவது ஒட்டுமொத்த விவசாயிகளையும் மத்திய பாஜக அரசு அடகு வைப்பதை ஆதரிப்பதுதான் என்பதைத் தவிர வேறென்ன?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.