Skip to main content

“முந்திரி இறக்குமதியை தடை செய்து, முந்திரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” - விவசாயிகள் கண்ணீர் 

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

 farmers demand Cashew farmers should be saved -

 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை ஆட்சியர் அபிநயா, வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா,  கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் பேசிய விவசாய சங்க தலைவர் மாதவன், “தற்போது குறுவை சாகுபடி தொடங்கியுள்ளதால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். டெல்டா பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாராத வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். விவசாயி தேவநாதன் பேசும்போது, “தாட்கோ உள்ளிட்ட எந்த கடன்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

குறிஞ்சிப்பாடி ராமலிங்கம் பேசும்போது, “குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி அதிகஅளவில் செய்யப்பட்டுள்ளது. இந்த எள் அறுவடை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் செடியிலேயே எள் வெடித்து கீழே விழுந்து வீணாகின்றன. எனவே எள் அறுவடை இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

புதுக்கூரைப்பேட்டை கலியபெருமாள் பேசும்போது, “விருத்தாச்சலம் பகுதியில் சாகுபடி செய்யும் பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரம் கிராம விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க வேண்டும். என்.எல்.சி தண்ணீரை விருத்தாச்சலம் மணிமுத்தாறு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் ரவீந்திரன் பேசும்போது, “கல்லணை முதல் கீழணை வரை 81 கிலோ மீட்டர் தூரம் கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 1.52 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் கதவணை, தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம், அரியலூர் மாவட்டம் இடையே தூத்தூரில் கதவணை கட்ட திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது. கீழணை பாசன உரிமைகள் காக்கும் பொருட்டு கல்லணை முதல் கீழணை வரை கதவணையோ, தடுப்பணையோ கட்ட எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை மூட வேண்டும்” என்றார்.

 

சின்னகண்டியங்குப்பம் குப்புசாமி பேசும்போது, “தானே புயலால் மாவட்டத்தில் முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து வெளிநாடுகளில் இருந்து முந்திரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் தற்போது உள்ளூர் முந்திரிக்கு சரியான விலை கிடைக்கவில்லை. முன்பு ஒரு மூட்டை முந்திரிக்கு ரூபாய் 15,000 கிடைத்தது. தற்போது ஒரு மூட்டைக்கு ரூபாய் 6000 தான் கிடைக்கிறது. இதனால் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குடும்பம் நடத்த முடியாமலும்,  குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையிலும் தவிக்கின்றோம். எனவே முந்திரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” என்று கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு ஆதரவாக பேசிய மற்ற விவசாயிகள், “முந்திரி விவசாயிகள் நலன் கருதி வெளிநாட்டில் இருந்து முந்திரி இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர் 

 

இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், “விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது கோரிக்கை குறித்து எடுத்துரைக்கும் போது அதனை பெயரளவில் கூட்டத்தில் பங்கேற்றவர்களாக இருக்காமல் அதிகாரிகள் தரப்பினர் குறிப்பு எடுத்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு வழி காண வேண்டும். இது தொடர்பாக அடுத்து வரும் அதிகாரிகள் மத்தியிலான கூட்டத்தில் கண்டிப்பாக நடவடிக்கை குறித்து தெரியப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடலூரில் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு? போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

வடலூர் அருகே தென்குத்து புதுநகர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி வெண்ணிலா என்கின்ற குமாரி(30); மணிகண்டன் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி குமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வடலூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். தென்குத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கல்லுக்குழி மணல் குவாரியில், வடலூர் நகராட்சி குப்பை கொட்டப்படுவதால் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குமாரியும் டெங்கு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி  குப்பை கொட்டப்படும் கல்லுக்குழி மண் குவாரி பகுதியில் திரண்டனர்.

Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதனை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் வடலூர் நகராட்சி குப்பை இங்கு கொட்டப்படுவதால்தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை குப்பை கொட்ட கூடாது எனக் கூறியும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இங்க குப்பைகளை கொட்டி வருகிறது. அதனால் அங்கு சென்று கேட்போம் எனக்கூறி அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்த வடலூர் சேர்மன் சிவக்குமாரை முற்றுகையிட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சேர்மன் சிவகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமாரை கேட்டபோது அந்த பெண் இறந்ததுக்கும் குப்பை கொட்டியதுக்கும் சம்பந்தம் இல்லை. பல இடங்களில் டெங்கு உள்ளது. ஆனால் அந்த பெண் இறந்தது டெங்குவால் இல்லை, இனிமேல்தான் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறினார். இதுகுறித்து மருத்துவத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அந்த பெண் டெங்குவால் தான் இறந்துள்ளாரா? என சரியான விளக்கத்தை கூறினால் தான் மக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சம் போகும் எனக் கூறப்படுகிறது. 

Next Story

கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னை மக்களுக்கு படகு, உணவு, உடைகள் அனுப்பி வைப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Sending boat, food and clothes from Cuddalore district to Chennai people

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

தமிழக அரசு இயல்புநிலை திரும்ப பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி 1081 கிலோ கிராம் பால்பவுடர், 21,550 பிரெட் பாக்கெட்டுகளும், 16,784 ரொட்டி பாக்கெட்டுகளும், 33,508 குடிநீர் பாட்டில்களும், 150 ஜாம் மற்றும் பண் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், போர்வைகள் மற்றும் துணிமனிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீரை வெளியேற்றுவதற்கு 10 எச் பி மோட்டார் இன்ஜின் 10ம், ஒரு 40 எச்பி மோட்டார் இன்ஜினும் மேலும் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், இன்ஜின் இயக்குபவர் என 10 பணியாளர்கள் நீரை அகற்றும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 190 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.