Skip to main content

“முந்திரி இறக்குமதியை தடை செய்து, முந்திரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” - விவசாயிகள் கண்ணீர் 

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

 farmers demand Cashew farmers should be saved -

 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை ஆட்சியர் அபிநயா, வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா,  கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் பேசிய விவசாய சங்க தலைவர் மாதவன், “தற்போது குறுவை சாகுபடி தொடங்கியுள்ளதால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். டெல்டா பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாராத வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். விவசாயி தேவநாதன் பேசும்போது, “தாட்கோ உள்ளிட்ட எந்த கடன்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

குறிஞ்சிப்பாடி ராமலிங்கம் பேசும்போது, “குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி அதிகஅளவில் செய்யப்பட்டுள்ளது. இந்த எள் அறுவடை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் செடியிலேயே எள் வெடித்து கீழே விழுந்து வீணாகின்றன. எனவே எள் அறுவடை இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

புதுக்கூரைப்பேட்டை கலியபெருமாள் பேசும்போது, “விருத்தாச்சலம் பகுதியில் சாகுபடி செய்யும் பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரம் கிராம விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க வேண்டும். என்.எல்.சி தண்ணீரை விருத்தாச்சலம் மணிமுத்தாறு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் ரவீந்திரன் பேசும்போது, “கல்லணை முதல் கீழணை வரை 81 கிலோ மீட்டர் தூரம் கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 1.52 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது. தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் கதவணை, தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம், அரியலூர் மாவட்டம் இடையே தூத்தூரில் கதவணை கட்ட திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது. கீழணை பாசன உரிமைகள் காக்கும் பொருட்டு கல்லணை முதல் கீழணை வரை கதவணையோ, தடுப்பணையோ கட்ட எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை மூட வேண்டும்” என்றார்.

 

சின்னகண்டியங்குப்பம் குப்புசாமி பேசும்போது, “தானே புயலால் மாவட்டத்தில் முந்திரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து வெளிநாடுகளில் இருந்து முந்திரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் தற்போது உள்ளூர் முந்திரிக்கு சரியான விலை கிடைக்கவில்லை. முன்பு ஒரு மூட்டை முந்திரிக்கு ரூபாய் 15,000 கிடைத்தது. தற்போது ஒரு மூட்டைக்கு ரூபாய் 6000 தான் கிடைக்கிறது. இதனால் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குடும்பம் நடத்த முடியாமலும்,  குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையிலும் தவிக்கின்றோம். எனவே முந்திரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” என்று கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு ஆதரவாக பேசிய மற்ற விவசாயிகள், “முந்திரி விவசாயிகள் நலன் கருதி வெளிநாட்டில் இருந்து முந்திரி இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர் 

 

இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், “விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது கோரிக்கை குறித்து எடுத்துரைக்கும் போது அதனை பெயரளவில் கூட்டத்தில் பங்கேற்றவர்களாக இருக்காமல் அதிகாரிகள் தரப்பினர் குறிப்பு எடுத்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு வழி காண வேண்டும். இது தொடர்பாக அடுத்து வரும் அதிகாரிகள் மத்தியிலான கூட்டத்தில் கண்டிப்பாக நடவடிக்கை குறித்து தெரியப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.