Skip to main content

குறைதீர்ப்பு கூட்டம்; கலங்கிய குடிநீருடன் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

  farmers came grievance redressal meeting with disturbed drinking water District Collector

 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி முன்னிலையில் நடந்தது. துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிகள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசினார்கள். மிசா மாரிமுத்து பேசும் போது.. திரும்ப திரும்ப பேச வருவது வெட்கமாக உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றினால் ஏன் திரும்ப திரும்ப பேசுகிறோம். காவிரி குண்டாறு வரனும். ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

 

விவசாயி துரைமாணிக்கம், “காப்பீடு பணம் வந்தால் தான் விதை வாங்கலாம். ஆகவே காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்” என்றார். விவசாயி சுப்பையா.. தைல மரம், சீமைகருவேல மரங்களை அகற்றுவதில்லை. கேட்டால் அகற்றுவோம் என்று சொல்வதோடு அதிகாரிகளின் வேலை முடிந்துவிடுகிறது. கடவாக்கோட்டை கண்மாய் மழை வெள்ளம் வெளியேற்ற உடைக்கப்பட்டது மறுபடி சீரமைக்கவில்லை. மறுபடி மழை வெள்ளம் வந்தால் கிராமம் மூழ்கும். அதிகாரிகள் கண்கொள்ளவே இல்லை.
 

இப்படி முன்பதிவு செய்த பலர் பேசி முடித்த நிலையில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல அழைக்கப்பட்ட போது, ஏராளமான விவசாயிகள் எழுந்து, விவசாய சங்க பிரதிநிகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தனி நபர்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை சொல்ல நினைத்து வந்தால் எங்களுக்கு அனுமதி இல்லை. கோரிக்கையை எப்படிச் சொல்வது? இனிமேல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பதை மாற்றி விவசாய சங்க பிரதிநிதிகள் குறைதீர் கூட்டம் என்று சொல்லலாம் என்றனர்.

 

இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், அடுத்தடுத்த கூட்டங்களில் விவசாயிகளும் முன்பதிவு செய்து பேச வாய்ப்பளிக்க வேண்டும். தவிர்க்க கூடாது என்று கூறியதுடன் பேச வாய்ப்பில்லாத விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்போதே நேரில் கொடுத்து விபரங்களை அறியலாம் என்றார். தொடர்ந்து அதிகாரிகள் பதில் கூறும் போது, கால்நடை அலுவலர். இலுப்பூரில் 42 கால்நடை மருந்தகத்தில் 21 மருத்துவர்களே உள்ளனர். அதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

 

நீர்வளத்துறை பெண் அதிகாரி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூறும் போது.. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு அகற்றப் போனால் பாதுகாப்பு இல்லை. கவிநாடு கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றப் போனபோது ஒரு வழக்கறிஞரே 'அன்பார்லிமெண்ட்'  வார்த்தைகளில் பேசுகிறார். அவர் பற்றி பார்கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.

 

அப்போது எழுந்த சில விவசாயிகள் அதிகாரிகளே பாதுகாப்பு இல்லைனு சொல்லலாமா? என்றனர். நான் விவசாய செய்த நிலத்தில் விவசாயம் இல்லை என்று கூட்டுறவு சங்கம் சொல்லி விவசாயிகளை கொச்சைப்படுத்தலாமா? என்ற விவசாயி மகேந்திரனின் கேள்விக்கு கூட்டுறவுத் துறை அதிகாரி உரிய விசாரணை செய்வதாக கூறினார்.

 

காவிரி குண்டாறு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி குண்டாறு)  2023 - 24 ரூ.180 கோடி நிலமெடுப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறும் போது கூட்டமாக எழுந்த விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதி விவசாயிகள்.. நிலமெடுப்பு பணியில் தவறு நடக்கிறது. கோரையாற்றில் குண்டாறு இணைக்க அப்பகுதியில் உள்ள சாராய ஆலைக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் அதிகாரிகள் என்று கூறி ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து மது தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் கலங்கி வருகிறது என்று கலங்கிய தண்ணீர் பாட்டில்களுடன் ஆட்சியர் முன்பு முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த தண்ணீரை வாங்கிப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.