Skip to main content

கரோனா அச்சத்தால் மந்தமான மாட்டுச் சந்தை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021
Famous cattle trade slowed down by second wave of Corona

 

ஈரோட்டில் பிரபலமான கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகிற கறவை மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது. இதற்காகவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாட்டு வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்கு மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

 

குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒவ்வொரு வாரமும் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரண்டாவது அலையாக கரோனா தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியா முழுக்க ஏற்படும் தினசரி பாதிப்புகளில் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த இரு மாநிலங்களிலும் கரோனா வேகமாகப் பரவி வருவதால், இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த இரண்டு மாநிலத்துக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதன் காரணமாக 25 ஆம் தேதி வியாழக்கிழமை ஈரோடு கருங்கல்பாளையத்தில் கூடிய மாட்டுச் சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள் ஒருவர்கூட வரவில்லை.

 

பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வரமுடியவில்லை. இதன் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. இந்த மாட்டுச் சந்தைக்கு 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. அதில் பசு மாடுகள் ரூபாய் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூபாய். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும், வளர்ப்புக் கன்றுகள் ரூபாய் 10,000 முதல் 15,000 வரையும் விற்பனையானது. சந்தையில், 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கர்நாடக, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் வியாபாரம் மந்தமாக நடந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.