Skip to main content

“நீ இங்க வாழணும்னா பணத்தோடு வா, இல்லனா வராத..” - மனைவியை விரட்டிய தொழிலதிபர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

 famous businessman in Salem has filed for divorce from his wife

 

பிரபல தொழிலதிபர் வீட்டுக்கு வந்த இளம்பெண் ஒருவர், திடீரென வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் இராமச்சந்திரன். இவர் சேலம், நாமக்கல் மற்றும் ஓசூர் பகுதிகளில் துணிக்கடைகளையும் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மகன் கார்த்திக் பாலாஜி. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் கார்த்திக் பாலாஜிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் சுபராகாவிற்கும்  திருமணம் நடைபெற்றுள்ளது. 

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த கார்த்திக் - சுபராகா தம்பதி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், கார்த்திக் பாலாஜிக்கு பிசினஸ் தொடர்பான கடன் பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையில் அடிக்கடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தனது மனைவி சுபராகாவின் வீட்டிலிருந்து 5 கோடி ரூபாய் பணம் வாங்கி வரச்சொல்லி கார்த்திக் பாலாஜி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது அப்பாவுக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அவர்களும் பணப் பிரச்சனையில்தான் இருக்கிறார்கள் என சுபராகா கூறியுள்ளார். ஆனால், சுபராகாவின் பேச்சால் ஆத்திரமடைந்த கார்த்திக் பாலாஜி குடும்பத்தினர், “நீ இங்க  வாழணும்னா பணத்தோடு வா.. இல்லனா வராத” என தடாலடியாக பேசி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தன்னுடைய கணவன் குடும்பத்தினரின் செயலால் மனம் நொறுங்கிய சுபராகா தனது சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே ஃபோன் மூலமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், கார்த்திக் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சுபராகா, கேரளா நீதிமன்றத்திற்குச் சென்று தனது கணவர் விவாகரத்து செய்வதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், அந்த வழக்கு விசாரணை முடியும் வரை தனது கணவர் வீட்டிலேயே தன்னை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை சுபராகாவை அவரின் கணவர் வீட்டிலேயே தங்க அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே கார்த்திக் பாலாஜி வீட்டிற்கு புறப்பட்டு சுபராகா வந்துள்ளார். ஆனால் மருமகள் சுபராகா வந்திருக்கும் தகவல் தெரிந்தும் வீட்டின் கதவைக் கூட திறக்காமல் இருந்துள்ளனர் கார்த்திக் குடும்பத்தினர். கோர்ட்டு அனுமதி தந்தும் வீட்டினுள்ளே அனுமதிக்காததால் தொழிலதிபர் இராமச்சந்திரனின் வீட்டின் வாசலில் அமர்ந்தபடி சுபராகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார், இளம்பெண் சுபராகாவிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்துள்ளனர். பிரபல தொழிலபதிபரின் வீட்டின் எதிரே அவரின் மருமகள் தர்ணாவில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பை நிலவியது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்