Skip to main content

ஓசூரில் வேன் ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை! மனைவியைக் கண்டித்ததால் தம்பி வெறிச்செயல்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

family issue one passed away police investigation in Hosur

 

ஓசூரில், மனைவியைக் கண்டித்ததால் அண்ணன் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்த தம்பி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்னையப்பா. இவருடைய மகன் சென்னப்பா என்கிற சேகர் (37). வேன் ஓட்டுநர். அன்னையப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா. இவருடைய மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அந்த வகையில் சென்னப்பாவும், முனிராஜும் அண்ணன், தம்பி ஆகின்றனர். இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகில்தான் இருக்கின்றன. இந்நிலையில், ஜன. 8ம் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவுக்கும், சென்னப்பாவின் தந்தைக்கும் இடையே ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சென்னப்பா, முனிராஜின் மனைவி மதுவைக் கண்டித்துள்ளார்.

 

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முனிராஜிடம், நடந்த சம்பவத்தைக் கண்ணீருடன் மது கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த முனிராஜ், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மனைவியைக் கண்டித்தது தவறு எனக்கூறி, சென்னப்பாவிடம் தகராறு செய்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் முனிராஜின் நண்பரான பசவராஜ் மகன் ரேணுகா ஆரத்யா (20) மற்றும் பேகேப்பள்ளியைச் சேர்ந்த சக்தி (22) ஆகியோரும் அவருக்கு ஆதரவாக சென்னப்பாவிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.

 

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முனிராஜும் அவருடைய நண்பர்களும் சென்னப்பாவை சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த முனிராஜ், சென்னப்பாவை சரமாரியாகக் குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். சென்னப்பாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னப்பா இறந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜ் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக முனிராஜ், அவருடைய கூட்டாளி ரேணுகா ஆரத்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, உடற்கூராய்வு முடிந்த பிறகு சென்னப்பாவின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வீட்டில் உட்கார்ந்திருந்த அவருடைய தந்தை அன்னையப்பாவை அஞ்சலி செலுத்த அழைத்தனர். அப்போது அவர் சரிந்து கீழே விழுந்தார். அவர் அமர்ந்திருந்த நிலையிலேயே மாரடைப்பில் இறந்துவிட்டது தெரிய வந்தது. மகன் கொலையுண்ட அதிர்ச்சியில் தந்தையும் மாரடைப்பில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.