சென்னை அருகே பொழிச்சலூரில் ஐ.டி நிறுவன ஊழியர் மனைவி, இரு குழந்தைகளை எலெக்ட்ரிக் ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி பாஜகவின் பொழிச்சலூர் மண்டல மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மே 27 ஆம் தேதி பிரகாஷ்- காயத்ரி தம்பதியினருக்கு திருமணநாள் என்பதால் காயத்திரியின் தந்தை திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாதத்தைத் தனது மகளுக்கு கொடுக்க வீட்டுக்கு சென்றுள்ளார். வீடு உள்பக்கமாக தாழிப்பட்டிருந்த நிலையில் உள்ளே ஏதோ மெஷின் இயங்கும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் அச்சமடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகள் காயத்ரி, மருமகன் பிரகாஷ், பேரக்குழந்தைகள் ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ ஆகிய நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பிரகாஷ் கையில் எலெக்ட்ரிக் ரம்பம் ஒன்று இயங்கி கொண்டிருந்த நிலையில் கிடந்தது. அந்த சத்தம்தான் வெளியே கேட்டுள்ளது.
இந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அமேசான் எனும் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் ரம்பத்தை ஆர்டர் செய்த பிரகாஷ் இந்த கொலை செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கொலை நிகழ்ந்த வீட்டிற்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கடன் தொல்லையால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எங்களின் முடிவுக்கு யாரும் காரணமல்ல என்ற கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம். மனைவி குழந்தைகளை பேட்டரியால் இயங்கக்கூடிய ரம்பத்தால் அறுத்து கொலை செய்துவிட்டு வலது கையால் ரம்பத்தை இயக்கி தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரகாஷ் என காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் வீட்டுக்கு அருகிலேயே நாட்டு மருந்து கடை ஒன்றை வைத்திருந்ததாகவும், கரோனா காலத்தில் நன்றாக வருமானம் வந்த கடை தற்பொழுது இழப்பில் கொண்டுபோய் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் அவர் ஆரம்பித்த நெய் விற்பனை கடையும் இழப்பில் சென்றதால் குடும்பம் கடனில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் இருக்கும் மனைவியும் பல்வேறு தரப்புகளில் உதவியை நாடிய போதிலும் கடனை அடைக்க முடியாத சூழல் இருந்ததாக கூறப்படுகிறது. 3 லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரத்தை போலீசார் வீட்டில் கண்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் தற்கொலை என்றாலும் ஆன்லைனில் ரம்பத்தை வாங்கி கொடூர முறையில் தற்கொலை செய்ய என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர தற்கொலை சம்பவம் பொழிச்சலூரில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.