தமிழ்நாடு 2023 - 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது. இதில், சட்டமன்றத்தில் தனது பதிலுரையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் மட்டும் போதாது. மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை தொடங்கினோம்.
ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனங்கள் மக்களிடம் ஆசையைத் தூண்டி ஏமாற்றுகின்றன. இத்தகைய நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுகளில் முரண்பாடு இருக்கிறது. ஏன் இந்த தடுமாற்றம்? கொடநாடு கொலை, கொள்ளையை அப்போதைய முதலமைச்சரே மறைக்க முற்படும்போது, திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்? சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும்.
கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 3 நாளில் இதுபோன்ற வழக்கை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசுதான். கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டன.
மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சாதிச் சண்டை பூசல் இன்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. காவல்நிலைய மரணங்களை தடுப்பதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது காவல்நிலைய மரணங்கள் குறைந்துவிட்டது" என்று தெரிவித்தார்.