Skip to main content

கோடிகளை குவித்த சேலம் மாநகராட்சி மாஜி பொறியாளர்; ஓய்வுக்கு முதல் நாளில் அதிரடி பணியிடை நீக்கம்!  

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Ex-engineer Salem Corporation suspended for adding crore assets excess income

 

வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகளை வாரிச் சுருட்டிய புகாரின் பேரில், சேலம் மாநகராட்சி முன்னாள் பொறியாளர் அசோகன், ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.     

 

சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர், சேலம் மாநகராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு மாநகர பொறியாளராகப்  பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் மீது ஊழல் புகார் கிளம்பியது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்த அப்போதைய நகராட்சி நிர்வாக ஆணையர் ஷிவ்தாஸ் மீனா, ஆறு மாத காலமாக வேறு இடத்தில் பணியில் சேர விடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தார்.     

 

இந்த நிலையில் அசோகன், அவருடைய மனைவியும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான பரிவாதினி, தாயார் பாக்கியம் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்தகாக, சேலம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு  செய்தனர்.     அதாவது, கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை செக் பீரியடு ஆக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்  அசோகன் மற்றும் குடும்பத்தாரின் வருமானம் 3.30 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதில் மாதச் சம்பளம், சொத்துகள் விற்பனை, வாடகை  வருமானம் மற்றும் இதர இனங்கள் மூலமாக 1.22 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.  

 

இதே காலகட்டத்தில் உணவு, வீட்டு பராமரிப்பு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவு, இதர இனங்கள் மூலமாக 27.80 லட்சம் ரூபாய் செலவுகள் ஆகியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அசோகன் மற்றும் அவருடைய குடும்பத்தார் வருமானத்துக்கு அதிகமாக 2.20 கோடி ரூபாய்  சேர்த்துள்ளது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு, சேலம் நகர கூட்டுறவு வங்கியில் அசோகனுக்குச் சொந்தமான லாக்கரை திறந்தும் சோதனை  நடத்தப்பட்டது. அதில் 45 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 130 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. இது தவிர அசோகன் அவருடைய உறவினர்கள், பினாமிகள் பெயரில் நீச்சல் பயிற்சி மையம், உடற்பயிற்சிக்கூடம், 100க்கும் மேற்பட்ட வீடுகள்,  ஏற்காட்டில் நிலங்களை வாங்கிப் போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.    

 

இந்நிலையில், ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு நெல்லை மாநகராட்சியில் மாநகர பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  பொறியாளர் அசோகன், 2023ம் ஆண்டு ஜன. 31ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை முடிவடையாமல் இருந்ததால் அவரை பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்றும், துறை ரீதியாக என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் ஊழல் தடுப்புப்பிரிவு தரப்பில் அரசிடம் முறையிடப்பட்டது.  

 

இதையடுத்து அசோகனை கடந்த ஜன. 30ம் தேதி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, பணி  ஓய்வுபெற ஒரு நாள் இருந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''பொறியாளர் அசோகன் மீதான வழக்கு  விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அவருடைய சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.  விரைவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அவர் மீதான வழக்கு விசாரணை முடிவடையாததால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.