Skip to main content

கோதாவரி – காவிரி இணைப்பை சொல்லி தமிழக மக்களை இந்த ஆட்சியாளர்கள் முட்டாளாக்க கூடாது - ஈஸ்வரன்

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

"கோதாவரி – காவிரி இணைப்பை சொல்லி தமிழக மக்களை இந்த ஆட்சியாளர்கள் முட்டாளாக்க கூடாது. முதலில் தமிழக நீர்பாசன திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும்" என கூறினார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

அவர்  மேலும் கூறும்போது,   "காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒருசில நாட்கள் கனமழை தொடர்ந்தால் மேட்டூர் அணை கூடிய விரைவில் முழு கொள்ளளவை எட்டும். கடந்த சில மாதங்களாக குடிக்கவே தண்ணீர் இல்லாமல் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தமிழகம் சற்று ஆறுதல் அடையும் நிலை உருவாகியிருக்கிறது.

 

e

 

 ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் திறந்துவிடப்படும் அதிகப்படியான தண்ணீரை கடலில் கலக்காமல் சேமித்து வைக்க தமிழக அரசிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். கடந்த வருடம் 500 டிஎம்சி தண்ணீருக்கும் மேலாக கடலில் வீணாக கலக்க விட்டுவிட்டு மீண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடத்தில் கையேந்தி நின்றது போல இந்த முறையும் செய்ய போகிறோமா என்பதை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும். 

 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது கடைமடைக்கு சென்று சேர்கிறதோ இல்லையோ ஆனால் கடலில் கலக்கிறது. நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. 

 

காவிரியில் வரும் தண்ணீரை வீணாக கடலில் கலக்காமல் தடுக்க தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஏரி, குளங்களை நிரப்பி நிலத்தடிநீரை செறிவூட்டும் திட்டங்களை நிறைவேற்ற தமிழக ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எந்த  ஆர்வமும்காட்டாமல் இருப்பது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சாபக்கேடானது. குறிப்பாக கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட அவிநாசி – அத்திக்கடவு திட்டமானது இன்றைக்கும் அதேநிலையில் தான் உள்ளது. 

 

60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் தண்ணீர் தாக்கத்தை தீர்க்காமல் கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி பேசி தமிழக மக்களை முட்டாளாக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரியில் கரைபுரண்டோடும் நீரை உள்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் திட்டங்களான திருமணி முத்தாறு, அவிநாசி – அத்திக்கடவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே அகலப்பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலத்தடிநீரை சற்று மேலே கொண்டு வர முடியும்.

 

சென்னை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்றவுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கும், கல்குவாரி தண்ணீரை கொண்டு வருவதற்கும் மற்றும் இரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் தமிழக அரசு, மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் நீர்பாசன திட்டங்களை முன்னெடுக்காமல் வெற்று அறிவிப்புகளால் மக்களை ஏமாற்ற நினைப்பது சரியல்ல. எனவே இப்போதைக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத கோதாவரி – காவிரி இணைப்பை பற்றி தமிழக அரசு பேசிக்கொண்டிருக்காமல் தமிழகத்தில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தையும், தமிழக மக்களையும் குடிநீர் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும்." என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.