Skip to main content

கான்கிரீட் போடுவதா? இரு பிரிவாக மோதிக்கொள்ளும் விவசாயிகள்...!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

erode villagers have mixed reactions on river construction

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து விவசாயம், கால்நடை பயன்பாடுகள், மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக வெளியேற்றப்படும் தண்ணீர் கீழ்பவானி வாய்க்கால் மூலமாக மற்ற பகுதிகளுக்கு வருகிறது. சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் இந்த கீழ்பவானி வாய்க்காலால் விவசாய பூமியாக உள்ளது. வாய்க்கால் முழுமையான தூரத்திற்கும் இருபுறமும் மண் கரைகள் தான். 60 வருடங்களாக இப்படித்தான் கீழ்பவானி வாய்க்காலில் நீர் ஓடுகிறது. 

 

அப்படிப்பட்ட இந்த வாய்க்காலில் நவீன சீரமைப்பு என்ற பெயரில் 709 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிக்கான ஆயத்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கான்கிரீட் தளம், சுவர் அமைந்தால் கடைமடைப் பகுதிவரை தண்ணீர் வீணாகாமல் செல்லும் என்று இத்திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தாலும், கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என மற்றொரு தரப்பு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கசிவு நீர்ப் பாசனத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படும் என்பதாலும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

 

இதனால் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில், இருதரப்பு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்து, கடந்த வாரம் திட்டம் வேண்டாம் என்று கூறிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இன்று இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்து, அதற்காக ஏற்கனவே அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

 

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் அமைச்சர் முத்துசாமியிடம், "கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 9-ந் தேதி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தோம். அப்போது செயற்பொறியாளர் மே 15ஆம் தேதி அனைத்து வேலைகளும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், தற்போது வரை வேலைகள் தொடங்கப்படவில்லை. 

 

கீழ்பவானி வாய்க்கால் மிகப் பலவீனமடைந்து தண்ணீர் செலுத்தும் திறனை இழந்துவிட்டது என 10 ஆண்டுகளுக்கு முந்தைய நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் அறிக்கை தெரிவிக்கிறது. அதைத் தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மோகனகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று கீழ்பவானி கால்வாயைச் சீரமைத்து வலுப்படுத்தத் தமிழக அரசு நபார்டு வங்கி மூலம் ரூபாய் 709 கோடி மதிப்பில் ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகள் தடைப்பட்டுள்ளது. 

 

சென்ற ஆண்டு கால்வாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல முறை தண்ணீர் நிறுத்தப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். இந்த ஆண்டும் அதே போல் ஏப்ரல் 30ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 19 நாட்கள் கடந்த நிலையிலும் நீர்வளத்துறை திட்டவட்டமான முடிவுகளை எடுத்து சீரமைப்பு வேலைகளைத் தொடங்காமல் இருக்கின்றது. இதன் காரணமாக கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இங்கு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர். 

 

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். அமைச்சர் முத்துசாமி விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில்,  அவர்களும் தங்கள் தரப்பு கருத்துக்களைக் கூற முயன்றனர். அதற்கு அனுமதி கிடைக்காததால் சில விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் எதிர்த் தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

 

இதுகுறித்து விவசாயி விஜயகுமார் என்பவர் கூறும்போது, "கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் கான்கிரீட் தளம், சுவர் அமைக்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறி வருகிறோம். இங்கு இந்த திட்டம் அமைந்தால் நிலத்தடி நீர் முழுமையாகப் பாதிக்கப்படும். குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். சிப்காட் தொழிற்சாலை கழிவு நீர் உள்ளே வர வாய்ப்புள்ளது. கான்கிரீட் போட்டால் வாய்க்கால் கசிவு நீர் முற்றிலும் தடைப்பட்டு அதனை நம்பியுள்ள விவசாயிகள் பாசனம் பெறுவது கடினம் ஆகிவிடும். கீழ்பவானி கால்வாய் 60 வருடங்களாக உள்ளது. இந்த பாசனப் பகுதியில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பாசனப் பகுதிகள் அனைத்தையும் முறையாகத் தூர்வார வேண்டும்." என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.