Skip to main content

கரோனா காலத்திலும் கடத்தல்காரர்களின் வாழ்க்கை வழக்கமானதாகத்தான் போகிறது...

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Erode

 

ஊரடங்கு காலத்திலும் கொலை, கொள்ளை, சட்ட விரோத பொருட்கள் விற்பனை, கடத்தல் என சட்டத்திற்கு புறம்பான கிரிமினல் வேலைகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கிறது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த பொருட்கள் சாதாரண குக்கிராமத்தில் உள்ள கடைகள் வரை விற்பனை செய்யப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்துதான் இவைகள் தமிழகத்திற்கு இறக்குமதியாகிறது. இத்தொழிலின் மொத்த வியாபாரிகளாக இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள்தான்.

ஊரடங்கு என்பதால் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி நூதன வடிவில் நடக்கிறது. அதில் ஒன்றுதான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தையடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறையினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வந்த பிக்கப் வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த வேனை ஓட்டி வந்த சுரேஷ் என்பவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

அதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அப்போது பூண்டு மூட்டைகளுக்கு நடுவே 20 பாக்ஸ் மற்றும் 8 மூட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவைகள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான்மசாலா புகையிலை பொருட்கள் என தெரியவந்தது. 

 

Erode

 

உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்த காவல்துறையினர் வேனை  ஓட்டி வந்த சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து எடுத்து வருவதாகவும், அதனை விற்பனை செய்ய மதுரைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார். இதேபோல் மேலும் ஐந்தாறு வண்டிகள் மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் கூறிய அவர் இந்தப் பொருட்கள் யாரிடம் போய் ஒப்படைபீர்கள் என போலீஸ் கேட்டதற்கு யார் என்று தெரியாது வழியில் தொலைபேசி அழைப்பு வரும் சம்பந்தப்பட்ட நபர் வருவார் என்று மட்டும்தான் என்னிடம் கூறினார்கள் என கூறியிருக்கிறார்.

பிடிபட்ட இந்த புகையிலை பொருட்கள் பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்டதாம். போலீசார் வாகன ஓட்டுனர் சுரேஷ் மற்றும் உடன்வந்த தமிழ்வாணன் ஆகிய இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். பூண்டு மூட்டைகளுக்கு நடுவே இந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த ஊர்களுக்கு இப்படி போதை பொருள் கடத்தப்பட்டு வருகிறது என்பதையும் தேடி வருகிறார்கள். உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக பரிதவிக்கும் இந்த கரோனா கால கட்டத்திலும் கடத்தல்காரர்கள் வாழ்க்கை வழக்கமானதாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.